சென்னைக்கு வந்து போனாலே ராகுல் காந்திக்கு பதவி தானாக வரும்.. துரைமுருகன் பளிச் பேச்சு
சென்னை: சென்னைக்கு வந்து போனாலே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதவி தானாக வந்து சேரும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
கருணாநிதி சிலை திறப்பையடுத்து சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். துரைமுருகன் பேசியதாவது:
சோனியாவின் பிள்ளை ஸ்டாலின்
சோனியா காந்தியின் பிள்ளையாக திகழ்கிறார் ஸ்டாலின். பாஜக ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சோனியா காந்தி. இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியை முதன் முதலில் அறிவித்தவர் கருணாநிதிதான். பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்த தியாக சொரூபி சோனியா காந்தி என்று வாழ்த்தியவர் கருணாநிதி.
தியாக சொரூபி சோனியா
தியாகத்தின் திருவுருவம் என்று சோனியா காந்தியை புகழ்ந்தார். பிரதமர் பதவி நாற்காலி வீட்டு வாசலுக்கே வந்தபோதும், அதை மறுத்து மற்றொருவரை பிரதமராக்கியவர் சோனியா காந்தி.
கோபாலபுரம் குடும்பம்
மீண்டும் நேரு குடும்பத்தோடு கோபாலபுரம் குடும்பம் இணைந்துள்ளது மகிழ்ச்சி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, இந்தியாவின் அடுத்த பிரதமராகும் ஆற்றலும் பெருமையும் உள்ளது.
பதவி தேடி வரும்
நீங்கள் சென்னைக்கு வந்து போனாலே பதவி தானாக வரும். காரணம், எங்கள் தலைவரின் கை ராசி, அவர் மகனின் (ஸ்டாலின்) பெயர் ராசி. உங்களை வருக, வருக என வரவேற்கிறேன். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
வெட்கப் புன்னகை
இதையடுத்து ராகுல் காந்தி அருகே அமர்ந்திருந்த ஸ்டாலின், அதை மொழி பெயர்த்து ராகுல் காந்தியிடம் கூற, அவரும் சிரித்தபடியே அதை ஆமோதித்தார்.