நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மே 21-ல் ராகுல் காந்தி அஞ்சலி
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார்.

1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த உலகையே அதிரவைத்தது. ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் 26 தமிழருக்கு தூக்கு தண்டனை தொடங்கி 30 ஆண்டுகள் மேலாக சிறைவாசம் என நீடித்து தற்போது அனைவரும் கருணை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். சிறையில் இருந்து விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம், ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதித் திட்டங்கள் குறித்த விசாரணை முழுமை அடையவில்லை. மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு இன்னமும் பதிலும் கிடைக்காமல் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. ராஜீவ் கொலை தொடர்பான பல்வேறு புத்தகங்களிலும் இந்த கேள்விகள் எழுப்பப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இந்த ஆண்டு அஞ்சலி செலுத்துகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதற்காக வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் ராகுல்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்துதான் ராகுல் காந்தி தமது பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,000 கிமீ பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ராகுல் காந்தி பாதயாத்திரையானது, நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு புத்துயிர் கொடுத்தது. தற்போது நிறைவடைந்த கர்நாடகா தேர்தலில் காங்கிர்ஸ் ஆட்சியை பிடிக்கவும் ராகுல் காந்தி பாதயாத்திரை பெரிதும் உதவி இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.












Click it and Unblock the Notifications