ரயில் பயணிகளே கவனம்.. இனி டிக்கெட் இன்றி பயணித்தால் 2 மடங்கு அபராதம்.. புது ரூல்ஸ் இன்று முதல் அமல்
சென்னை: ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராத தொகை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை நேற்று இந்தியன் ரயில்வே வெளியிட்ட நிலையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய ரூல்ஸின் முழு விவரம் வருமாறு:
நம் நாட்டில் நீண்ட தூர பயணங்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரயில் பயணம் தான் பெஸ்ட். அரசு, தனியார் பஸ்கள், விமானங்களில் பயணிக்கும்போது டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் தான் பலரும் நீண்டதூர பயணங்களுக்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.

ஆனால் சிலர் ரயில்களில் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்த அபராத கட்டணத்தில் தற்போது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026' என்பதன் கீழ் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை குறைந்தபட்ச அபராத கட்டணம் ரூ.250 ஆக இருந்தது. இது தற்போது ரூ.500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி பயணிகள் டிக்கெட், பாஸ் இன்றி ரயிலில் பயணித்தாலோ அல்லது டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்க முயற்சித்தாலோ, அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிக்கெட் அல்லது பாஸ் உள்ளிட்டவற்றை மீண்டும் பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும். அதன்படி குறைந்தபட்ச அபராதமாக ரூ.500 + ரயில் டிக்கெட் கட்டணம் பயணிகளிடம் இரந்து வழங்கப்படும்.
இந்த அபராதத்தை செலுத்த மறுத்தால் ரயில்வே நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கும். இந்த விவகாரம் நீதிமன்றம் செல்லும்போது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது சிறை தண்டனை + அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இதனால் ரயில் பயணிகள் உரிய டிக்கெட்டுகளுடன் பயணத்தை மேற்கொண்டு அபராதம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications