ரூட் தல அட்டகாசம்.. 30 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கவும்.. ரயில்வே காவல்துறை கடிதம்
சென்னை: ரூட் தல பிரச்சினை காரணமாக ரயில் பயணத்தின் போது தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த 30 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். மின்சார ரயில்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பீக் நேரங்களில் பயணம் செய்வதை காண முடியும். இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

புறநகர ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வதும் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பிற பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது அடிக்கடி நடைபெறும் விஷயங்களில் ஒன்றாக பார்க்கமுடிகிறது. குறிப்பாக மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் படித்து வரும் மாண்வர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டும் சம்பவங்களும் நடப்பதை காண முடிகிறது.
ரூட் தல பிரச்சினை: சமீபத்தில் கூட அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடனும், வாள்போன்ற நீண்ட அரிவாளுடனும் விரட்டி விரட்டி வெட்டினர். சமீபத்தில் கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய பிளாட்பார்மில் கோடு போட்டு பயணிகளை அச்சுறுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட 'ரூட்டு தல' பிரச்சனையால் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்படி பயணிகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து மாணவர்கள் நடந்து கொள்வது நீடித்துக் கொண்டே வருகிறது.
30 மாணவர்கள்: இதனால் ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை என்பதால் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே எச்சரித்து இருந்தது. ரயிலில் சாகசம் செய்தால் இனி கைதுதான் என்றும், மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரூட் தல பிரச்சினை தொடர்பாக மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 30 பேரை நீக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் என மொத்தம் 30 கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications