போச்சு.. சோத்துல மண்ணை அள்ளிப் போடும் மத்திய அரசு! ரயில்வேயிலும் வருது Layoff.. பீதியில் ஊழியர்கள்!
சென்னை: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 2 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு ரயில்வே வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக புதிய கவலைகளையும் எழுப்பியுள்ளது. இதனால் பல ரயில்வே தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பாசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். தற்போது இந்திய ரயில்வேயில் மொத்தமாக சுமார் 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய ரயில்வே
இந்த நிலையில், அதில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாடு முழுவதும் சுமார் 29 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மண்டல ரயில்வேயில் மட்டும் 1,900க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும், சென்னை பகுதியில் உள்ள முக்கிய ரயில் பெட்டி தயாரிப்பு நிலையத்திலும் பல பணியிடங்கள் குறைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது.
பணியாளர் குறைப்பு
இந்நேரத்தில், நாட்டில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டை பாதைகள் அமைத்தல், மின்மயமாக்கல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சேவையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் நேரத்தில் பணியாளர்களை குறைப்பது சரியான முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரயில்வே ஊழியர் சங்கங்கள்
போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்று ரயில்வே ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக ரயில் பாதைகள் பராமரிப்பு, சிக்னல் கண்காணிப்பு, ரயில்களின் பராமரிப்பு போன்ற முக்கிய பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், பணிச்சுமை அதிகரிப்பதால் தவறுகள் நிகழும் அபாயமும் அதிகரிக்கலாம்.
வேலைவாய்ப்பு குறைப்பு
இது ரயில்களின் பாதுகாப்பு நிலையை பாதிக்கக்கூடும் என்றும், பயணிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உருவாகும் என்றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். "செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது புதிய ரயில்கள் அறிமுகமாகும் சூழல் நிலவுகிறது. மேலும், பல்வேறு சிறப்பு ரயில்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது சரியான முடிவு அல்ல.
ரயில்வே பாதுகாப்பு
நாட்டில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டை பாதைகள் அமைக்கும் பணிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த பாதைகளை சரியாக பராமரிக்க கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு மாறாக பணியாளர்களை குறைப்பது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானதாக இருக்கும் என்கிறார் ஓய்வு பெற்ற ரயில்வே தொழிற்சங்கத்தின் மனோகரன்.
ரயில்வே நிர்வாகம்
செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டாலும் இந்த முடிவு, ரயில்வே சேவையின் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications