ஒரே டிக்கெட்டில் கன்பார்ம் + வெயிட்டிங் லிஸ்ட்.. ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வே ரூல்ஸ் என்ன?
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில நேரத்தில் ஒரே டிக்கெட்டில் சிலருக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதும் சிலருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டும் கிடைத்து விடுகிறது. அப்படியான சமயத்தில் டிக்கெட்டில் உள்ள அனைவரும் பயணிக்க முடியுமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுகிறது. இதில் ரயில்வே விதிகள் என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் மக்களின் பயணத்தில் தவிர்க்க முடியாத இடம் ரயில்வேக்கு உண்டு. வசதி படைத்தவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் போக்குவரத்து அமைப்பாக ரயில்கள் உள்ளன. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்பதிவு டிக்கெட்
இதில் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, ரயில் டிக்கெட் பெறுவதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கவுண்ட்டர்களுக்கு மட்டுமே சென்று எடுக்க முடிந்த டிக்கெட்டுகளை தற்போது வீட்டில் இருந்தபடியே எடுக்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. இதனால் முறையாக டிக்கெட் வைத்து இருக்கும் பயணிகள் அல்லோலப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன. சில நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட் வைத்து இருக்கும் பயணிகளும் முன்பதிவு பெட்டிக்குள் ஏறி பயணம் செய்கிறார்கள். ஆன்லைனில் எடுத்த டிக்கெட் என்றால் தானாக டிக்கெட் கேன்சல் ஆகிவிடும்.
வெயிட்டிங் லிஸ்ட் + கன்பார்ம் டிக்கெட்
ஆனால் கவுண்ட்டர் டிக்கெட் என்றால் ஆட்டோமெட்டிக்காக கேன்சல் ஆகாது என்பதால், சில நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் பயணிக்கும் பயணிகளை டிக்கெட் பரிசோதகர்கள் கண்டுகொள்வது இல்லை. ஆனால் கடந்த 1 ஆம் தேதி முதல் விதிகளை கடுமையாக பின்பற்ற ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்துஇருந்தால் பயணிகளை ஸ்லீப்பர் மற்று ஏசி கோச்களில் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறி பயணம் செய்தால் ரயில்வே விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையே ரயிலில் பயணிகளுக்கு மிக முக்கியமான சந்தேகம் ஒன்று எழுந்தது. அதாவது, ஒரே டிக்கெட்டில் இரண்டு டிக்கெட்டுகள் கன்பார் ஆகி..ஏனைய இரண்டு டிக்கெட்டுகள் கன்பார்ம் ஆகாவிட்டால் அவர்களும் பயணிக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பயணிகளுக்கு அனுமதி இல்லை
இத்தகைய சூழலில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் பயணிக்கும் பயணிகள் பயணம் செய்ய அனுமதியில்லை எனவும், இந்த விதிகளை மீறி ரயிலில் பயணித்தால், டிக்கெட் பரிசோதகர், அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. ரயில்வே விதிகள் 1989 பிரிவு 155 ஐ மீறியதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் அபராதம் தவிர்ப்பதற்காக பொதுப்பெட்டியில் பயணிப்பதற்காக புதிய டிக்கெட்டை வாங்கி அதில் பயணம் செய்யலாம் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே விதிகளின்படி ஸ்லீப்பர் கோச் என்றால் ரூ. 250ம் ஏசி பெட்டி என்றால் ரூ.440 ம் அபராதமாக வசூலிக்கப்படும். அதுமட்டும் இன்றி ஏறிய ரயில் நிலையத்தில் இருந்து அடுத்து வரும் ரயில் நிலையம் வரையிலான கட்டணமும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications