தமிழக கடலோரங்களில் பரவலாக மழை.. புதுச்சேரி, நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை
Recommended Video
சென்னை: கன மழை எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வட தமிழக கடலோரத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.
திரூவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட 5 வட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேசமயம், காலையிலிருந்தே சென்னையில் மேகமூட்டமாக உள்ளது. மழை இல்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுற்று வட்டாரத்தில் மட்டும் லேசான மழை உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலையிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் காலையிலிருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் காரைக்குடி சுற்று வட்டாரத்தில் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் நல்ல மழை பெய்துள்ளது.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல மதுராந்தகம் ஏரியில் ஒரே நாளில் 13 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஏரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.