ரயிலுக்குள் கொட்டிய அருவி.. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் கசிந்த மழைநீர்.. பயணிகள் அவதி! வீடியோ
சென்னை: சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிக்குள் மழைநீர் கசிந்தது. மேலும் அருவி போல் மழைநீர் கொட்டியதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரிக்கு ரயில்கள் அதிகம் சென்று வருகின்றன.

அந்த வகையில் இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12633) புறப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டது. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் தான் இரவில் ரயில் செல்லும் இடங்களில் மழை பெய்தது. இந்த வேளையில் சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இருந்து மழைநீர் கசிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை அதிகரித்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. மேலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் மயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மழை நீர் கசிந்த பெட்டிக்குள் வரவழைக்கப்பட்டனர். பெண் ஊழியர் துடைப்பம் கொண்டு ரயில் பெட்டியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர். ஏசி பெட்டிக்குள் அருவிபோல் கொட்டிய மழைநீரால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை-கன்னியாகுமரி ரயிலின் ஏசி பெட்டியில் மழைநீர் கசிந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் பலரும் ரயில்வே துறையை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications