"கரண்ட் பில்".. என்னாது 1000 மெகாவாட்? இன்னும் குறைகிறது மின் நுகர்வு.. வெளுக்கபோகுது மழை.. இது எப்போ
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் கிட்டத்தட்ட 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் மின் நுகர்வு இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் வெயில் கொளுத்தி கொண்டிருக்க, மறுபக்கம் மழை வரப்போவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. நேற்றுகூட ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது.

அதில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைக்கு பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தொடரும் மழை: அந்த அறிக்கையில், "ஏப்ரல் 29ம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை: நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.ஏப்ரல் 1ம் தேதி, பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஏப்ரல் 2ம் தேதி, பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது..
இதனால் தமிழக மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.. காரணம், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது... இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது... பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது. வெப்பத்தை தாங்க முடியாமல் பலர் ஏசி-யை வழக்கத்துக்கு அதிகமாகவே பயன்படுத்த துவங்கி விட்டனர். பல வீடுகளில் கோடை வெயிலை சமாளிக்க இரவில் ஏசியை பயன்படுத்துகிறார்கள்..
மெகாவாட் உச்சம்: இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது. கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு குறைந்து வருகிறது.
இது தவிர கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளது. 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்து இருப்பதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது.
மின்நுகர்வு குறைவு: இது குறித்து மின் பகிர்மான உயர் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, தமிழகத்தில் இப்போது, பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் மழை பெய்வதால் மின் நுகர்வு உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தரவு மையங்கள் அதிகரிக்கிறது. ஏப்ரலை விட, மே மாதத்தில் மின் நுகர்வு குறைய வாய்ப்பு உள்ளது. மே மாதத்தில் கோடை மழை பெய்யும் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இப்போது 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவை இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications