மே மாதம் மழை வெளுக்கும்.. 110% அதிக மழைப்பொழிவு இருக்கும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: மே மாதத்தில் இந்தியா முழுவதும் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரி அளவை விட 110 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மே மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு 64.1 மி.மீ. இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்பதால், இது ஆரம்ப கால வெப்ப அலைகளில் இருந்து மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். இருப்பினும், மழைப் பரவல் நாடு முழுவதும் சீராக இருக்காது என்றும், வடகிழக்கு மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை செயல்பாடுகளைப் பொறுத்தவரை, மே 5 ஆம் தேதி வரை மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மே 3 முதல் மே 6 வரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சமவெளிப் பகுதிகளிலும், கிழக்குக் கடற்கரை மாநிலங்களிலும் இடி மற்றும் புயல் செயல்பாடுகள் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் மழைப்பொழிவு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வெப்பத்தைத் தணிக்கவும் உதவும் என்றாலும், குறுகிய காலத்தில் பெய்யும் தீவிர மழை நகர்ப்புற வெள்ளத்திற்கும் விவசாயப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மே இரண்டாவது வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகப் பருவமழை முன்னதாக தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் விதமாகத் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்னதாக தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்தாண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியோடு, பருவமழைக்கான தொடக்கமாக அமையும் என்பதால் மே 7-ம் தேதிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications