திமுகவை வீழ்த்த ‘விஜய்’ எனும் அஸ்திரத்தையும் பயன்படுத்துவோம்.. ஓப்பனாக பேசிய ராஜேந்திர பாலாஜி
சென்னை: திமுகவை வீழ்த்த விஜய் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாங்கள் திமுகவை தோற்கடிக்க திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அழைப்பதற்கு தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் நாடக வேஷம் கலைந்துவிட்டது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த விஜய் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் தென்காசி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய மக்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "திமுக அரசு திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எங்கு பிரச்சனை நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு அதை வைத்து அரசியல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அந்த வகையில் திமுகவின் நாடக வேஷம் கலைந்து நீண்ட நாட்கள் ஆகிறது.
"திமுகவை வீழ்த்த அதிமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. விஜய் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக விமர்சித்துப் பேசி வருகிறார். அந்த வகையில் நாங்கள் திமுகவை தோற்கடிக்க திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அழைப்பதற்கு தயாராக உள்ளோம். அதற்காக அதிமுக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவார்.
தீர்ப்பை காரணம் காட்டி அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது. கூட்டத்தில் எத்தனை பேர் கூடினாலும் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பு கடமை திமுக அரசுக்கு உண்டு. அவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அனுமதி மறுப்பது தவறான முன்னுதாரணம். தேமுதிகவுக்கு அனுமதி மறுப்பது, அதிமுகவுக்கு அனுமதியை மறுப்பது, நிபந்தனைகளைக் கடுமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் தவறான ஒரு முன் உதாரணத்தை தமிழ்நாட்டில் திமுக செய்கிறது, மக்களைச் சந்திப்பது அரசியல் தலைவர்களின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் மாவட்டத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் நெரிசல் மரணத்திற்கு தவெக தலைவர் விஜய் மீது ஆளும் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த நிலையில் , "பாதுகாப்பு குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம், ஆளும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.
அதோடு, விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து சிபிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். எடப்பாடி பழனிசாமி கருத்தைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழக அரசிடம் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications