நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜகவை போட்டுத் தாக்கிய ராஜேஷ் குமார்! உடனே சண்டைக்கு வந்த தமிழிசை!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேர் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக மீது குற்றம் சாட்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் இன்று தமிழக சட்ட சபையில் அவரது அரசுக்கு நம்பிக்கை கூறும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் விஜய் தனது அரசுக்கு ஆதரவு கோரி பேசிய நிலையில் முதலாவதாக காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்தது.

அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமார்," விஜய் மதச்சார்பற்ற கட்சிகளும் மட்டும்தான் ஆதரவு கோரி இருக்கிறார். பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் நிலைநிறுத்த பாஜக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இது மக்களின் தீர்ப்பு. தமிழ்நாட்டை பாஜக மறைமுகமாக ஆட்சி செய்யக்கூடாது என்பதற்காக ஆதரவு கொடுத்து இருக்கிறோம். இந்த மண்ணில் வெறுப்பு அரசியலை ஆதரிக்க மாட்டோம். தமிழ்நாட்டில் பாஜக நுழைந்து விடலாம் என்ற கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பெயரில் ஆதரவு தருவோம், உடன் இருப்போம்" என்றார்.
இந்த நிலையில் பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி இருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இன்று முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையினான அரசிற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் முதலில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் ... வேறு எந்த கட்சியும் ஆதரவை நினைப்பதற்கு முன்னாலேயே அவசர அவசரமாக சென்று ஆதரவை தெரிவித்து விட்டு தங்களது பதவி ஆசைக்காக அதுவரை இருந்த கூட்டணியை உடனே முறித்துக் கொண்டு இன்று பாஜக மறைமுகமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தது என்றும் ஆளுநர் ஆட்சி கொண்டுவர முயற்சி என்று தொடர்ந்து அவர் முதற்கொண்டு மற்றவர்களும் சொல்லுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சுயநலத்திற்காக பல முடிவுகள் எடுத்துவிட்டு அதற்கு உள்நோக்கத்தோடு மறுபடியும் இல்லாத ஒரு கருத்தை பதிவு செய்வது அதுவும் பாஜக மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. ஆக இவர்கள் இன்றும் பாஜகவை பற்றி பார்த்து எவ்வளவு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. மதம் சார்புள்ள நடவடிக்கைகளை ஆதரித்துக் கொண்டு ஆனால் மதம் சார்பற்றவர்கள் என்று இவர்களை அவர்களே முத்திரை குத்தி கொள்வார்கள்.
அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஆக இன்று சட்டமன்றம் ஒற்றுமையை பதிவிடாமல் வேற்றுமையையும் வேறுபாட்டையும் விதைக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை நேற்று நடந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம்... மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர இதே போல அரசியலில் பல தவறுகளை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்காக அல்ல.. வருங்கால தமிழகம் இதை உணர்த்தும்.. அவரைத் தொடர்ந்து பேசி வரும் மற்றவர்களும் இதே கருத்தை சொல்வது கண்டிக்கத்தக்கது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications