ரஜினியின் கொரோனா அச்சம் நியாயமானதே!.. "இவர்களை" நம்பி அவர் எப்படி பிரச்சாரம் செய்வார்?
சென்னை: ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் அறவழி போராட்டத்தில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்த ரசிகர்கள் தற்போது அவரது உடல்நலமில்லை என கூறிய நிலையிலும் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.
டிசம்பர் 3-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினிகாந்த் நடுவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

ரசிகர்கள்
அடுத்த நாளே போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து சில நாட்கள் கழித்து பெருந்திரளான போராட்டத்திற்கு ரசிகர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து ரஜினியை அரசியலுக்கு அழைக்க யாரும் போராட்டங்களில் ஈடுபட கூடாது என ரசிகர் மன்றம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம்
எனினும் அதையும் மீறி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அறவழி போராட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் பெருந்திரளாக திரண்டுள்ளார்கள். இந்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை. இதனால் நோய் தொற்று ஏதேனும் பரவ வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
Recommended Video


கொரோனா
ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போராட்டத்தில் மாஸ்க் அணியாமல் வரும் இந்த ரசிகர்களை நம்பி அவர் எவ்வாறு அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியும்? 120 பேர் கலந்து கொண்ட படக்குழுவிலேயே கொரோனா வந்துவிட்டது என்றால் லட்சக்கணக்கான மக்கள் திரளும் பிரச்சாரங்களில் கொரோனா எளிதாக பரவும்.

வரமாட்டார்கள்
என் உயிர் போனாலும் பரவாயில்லை. என்னை நம்பி வரும் யாரையும் பலிகடாவாக்க விரும்பவில்லை என ரஜினி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இவரது அறிக்கைக்கு ஏற்ப இந்த ரசிகர்கள் போராட்டத்திற்கு வந்த படியே மாஸ்க் இல்லாமல் பிரச்சார கூட்டத்திற்கும் வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

கொரோனா
இவர்களின் அஜாக்கிரதையால் யாருக்கேனும் கொரோனா வந்து பாதிப்புகள் அதிகமானால் ரஜினி மன வேதனைப்படமாட்டாரா? வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திலும் இது போல் மாஸ்க் இல்லாமல் போராட்டம் நடத்தும் இவர்களால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தொலைதூர ஊர்களில் இருந்து ரசிகர்கள் வண்டி வைத்துக் கொண்டு வருகிறார்கள். ரஜினியின் உடல்நிலை மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை இதுதானா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications