ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.. விரக்தியில் ரசிகர்கள்.. வாட்ஸ் ஆப் குரூப்களில் அனல் பறக்கும் விவாதம்!
சென்னை: ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என ரசிகர்கள் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். சில வாட்ஸ் ஆப் குரூப்களில் இதுகுறித்து பெரும் விவாதமே நடக்கிறது. அதில் ரசிகர்கள் தங்கள் மனக்குமுறல்களை கொட்டி வருகிறார்கள்.
ரஜினிகாந்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வந்தனர். தற்போது வரை அதே மனஉறுதியுடன் தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ரஜினி வேறு மன நிலையில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம், மக்கள் மன்ற நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் தனது மனக்குமுறலை கொட்டியதாக கூறப்படுகிறது.
உடல்நிலை
அத்துடன் கொரோனா அச்சம், தனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. கொரோனா அச்சம் என்றால் தற்போது கட்சியை தொடங்கினால் பிரசாரத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. தன்னால் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார். அது அவரது குணம். தன்னால் பிறர் நஷ்டப்படக் கூடாது, பாதிக்கப்படக் கூடாது என நினைப்பவர்.
ரஜினிகாந்த்
இந்த நிலையில் அரசியல் விமர்சகர்கள் சொல்வதை போல அரசியலுக்கு வருவதா வேண்டாமா, வந்தால் என்ன நடக்கும், வந்தால் ஜெயிக்க முடியுமா போன்ற விஷயங்களை எல்லாம் ரஜினி இத்தனை நாட்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார். அதே போல் தன்னை நம்பிய ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது, ரசிகர்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வந்துவிட்டால் தனது உடல்நிலை என்னவாகும் போன்ற கேள்விகள் ரஜினியை துளைத்தெடுத்துள்ளன.
சீக்கிரம்
எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனது நிலைப்பாட்டை நான் அறிவிப்பேனு ரஜினி கூறியிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களுக்கு புரிந்து விட்டது. அவர் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என சூசகமாக சொல்வதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் இரவு தூக்கத்தையும் கெடுத்துவிட்டு வாட்ஸ் ஆப் குரூப்களில் விவாதம் நடத்தவே தொடங்கிவிட்டனர்.
ரஜினி
ரஜினி நிச்சயம் வருவார் என ஒரு சிலரும், அவரது நிலைப்பாடு பாசிட்டிவாக இருந்தாலும் சரி நெகட்டிவாக இருந்தாலும் சரி அதை ஏற்பது என மற்றொரு சிலரும் கூறி வருகிறார்கள். மேலும் அவர் வருவதும் வராததும் அவர் கையில் இருக்கிறது, இப்போது ரசிகர்கள் தங்கள் வேலையை பார்ப்போம் என்கிறார்கள். இன்னும் சிலரோ இத்தனை ஆண்டுகளாக காத்திருந்துவிட்டு தேர்தலை சந்திக்க 5 மாதங்களே உள்ள நிலையில் தற்போது மீண்டும் காத்திருக்குமாறு தலைவர் கூறுவது நம்மை பார்த்தால் அவருக்கு பாவமாக இல்லையா என்கிறார்கள்.
அசைவு
இப்படியாக நீடிக்கிறது இந்த விவாதம்... ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் நன்கு புரிந்து கொண்ட சில ரசிகர்கள் மட்டும் யதார்த்ததை புரிந்து கொண்டுள்ளார்கள். அதாவது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிக்கை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால் 2017-ஆம் ஆண்டு ரசிகர்களை கூட்டி சும்மா கெத்தா, ஸ்டைலா அறிவித்திருப்பார்.
மன்ற நிர்வாகிகள்
ஆனால் அறிக்கை வெளியிடுவதாக ரஜினி கூறுவதை பார்த்தால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்தி ரஜினியிடம் இருந்து கிடைக்காது என்றே அர்த்தம். அதாவது ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். தனது உடல்நிலையை காரணம் காட்டி அந்த முடிவை கைவிடுவார். அதை அறிக்கையாகவே வெளியிட்டிருக்கலாமே எதற்கு மன்ற நிர்வாகிகளை அழைத்துள்ளார் என நீங்கள் கேட்கலாம்.
ரசிகர்கள்
திடீரென வரமாட்டேன் என அறிக்கை விடுவதற்கு பதிலாக இப்படி நிர்வாகிகள் மனதில் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுப்பினால் அவர்கள் சூசகமாக புரிந்து கொண்டு அறிக்கை வந்தாலும் அதை நினைத்து கவலைப்பட மாட்டார்கள் என்கிறார்கள். இன்னும் சிலரோ ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் எதற்காக மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்டிக்கவில்லை என கேட்கிறார்கள். அதற்கு அர்த்தம் ரஜினி வருவார் என்பதில்லை, "நானே வரமாட்டேன், எதற்காக என் பெயரை வைத்து சம்பாதிக்கிறீர்கள்" என்பதுதான் அதன் அர்த்தம். இப்படி ரசிகர்களை சுற்றி பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
புத்தாண்டு பரிசு
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ரஜினியின் உண்மையான தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது, அவர் நிச்சயம் வருவார் என்ற மன உறுதியோடு இருக்கிறார்கள். பார்ப்போம், ரஜினி தனது நிலைப்பாடு மூலம் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசோ, பொங்கல் பரிசோ கொடுக்கிறாரா என்பதை!