திடீர்னு என்னாச்சு.. சாதி, மதம் பார்த்தால் நீக்கம்தான்.. மா.செ.க்களுக்கு ரஜினி மக்கள்மன்றம் வார்னிங்
ரஜினி மக்கள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை: சாதி, மதம் பார்த்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்றும், பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் கடுமையான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Recommended Video
தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது... இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியாக உள்ளது.. தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார்.
இவரது புது கட்சி "மக்கள் சேவை கட்சி"என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது... மேலும் 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில்,கட்சி தலைமை உறுதி செய்யும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வேலைகள்
இந்த சூழலில் பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளார்... தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளில் அவர் தீவிரம் காட்டியும் வருகிறார்.. மேலும், மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ல் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மா.செ.க்கள்
இது தொடர்பாக ரஜினி மக்கள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.. பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது... சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும். மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது" போன்ற அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
ஏற்கனவே, ரஜினிகாந்த் நடத்திய ஒரு ஆலோசனை கூட்டத்தில், "பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருப்பவர்கள் தன் கட்சியில் இருக்க வேண்டாம்" என்று அதிருப்தி மா.செ.க்களிடம் கூறியிருந்த நிலையில், தற்போது இதே விஷயம் மறுபடியும் வலியுறுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், மன்ற செயல்பாடுகள், பூத் கமிட்டி வரை வேகம் எடுத்து வருவது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
காரணம் என்ன?
அதேசமயம், எதற்காக இப்படி ஒரு திடீர் அறிக்கை வெளியாகி உள்ளது என்று தெரியவில்லை... ஒருவேளை பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் வாங்கி கொண்டு யாராவது முறைகேட்டில் ஈடுபட்டு விட்டார்களா? அப்படி முறைகேட்டில் ஈடுபட்டு இந்த விவகாரம் கட்சியின் மேலிடத்திற்கு தெரிந்து இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்று தெரியவில்லை!