'சிகிச்சை முடிந்தது..' காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது

உடல்நிலை பாதிப்பு
இந்தச் சூழலில், கடந்த அக் 28ஆம் தேதி ரஜினிகாந்த்திற்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார். இருப்பினும், ரஜினிக்கு இரவு முழுவதும் ஐ.சி.யு-இல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

மருத்துவமனையில் அனுமதி
அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. மேலும், அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்றும் இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
இந்தச் சூழலில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்னும் சில நாட்களில், அதாவது வரும் தீபாவளி தினத்தன்று அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஆடியோ வெளியீடு
இது தொடர்பாக Hoot தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், "சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு
ரஜினிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு இருந்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு காரணமாகச் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு நவீன டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்குச் சிகிச்சை முடிந்து ஒரு வாரம் ஓய்வில் இருந்த ரஜனிகாந்த், அதன் பின்னரே வீடு திரும்பினார். அந்த சமயத்தில் ரஜினி பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பல்வேறு நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

அண்ணாத்த ஷூட்டிங்
அதேபோல் கடந்த ஆண்டு அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்தச் சூழலில் தான் கடந்த அக் 28ஆம் தேதி தலைச்சுற்றல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் ட்வீட் செய்திருந்தனர்.

அண்ணாத்த ரிலீஸ்
அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த், கிராமத்துக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்த ரிலீஸை பிரம்மாண்டமாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சில இடங்களில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அவை மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications