வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த்.. கண்ணை கட்டுதே கட்சி அறிவிப்பு!
சென்னை: அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப் படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வந்தது.
இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் சென்று இருந்தார்.
அண்ணாத்த சூட்டிங்
அதில் நடித்துக் கொடுத்த பிறகு டிசம்பர் 31ஆம் தேதி, கட்சி அறிவிப்பு பற்றி வெளியிடப்போவதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அண்ணாத்த திரைப்பட தளத்தில் சுமார் 8 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போயஸ் கார்டன் இல்லம்
இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருப்பினும் மறுபடியும் டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொள்வது நல்லது என்பதால் அதுவரை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்குமாறு செய்துள்ளனர்.
தனிமையில் ரஜினி
தனிமைப்பட்டு கொள்வது பிறருக்கும் பாதுகாப்பானது என்பதாலும் தன்னைத் தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறாராம். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் எப்படி கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 31-ஆம் தேதி துவங்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டாவிட்டால், கட்சி அறிவிப்பு வாய்ப்புகள் தள்ளிப் போகும் அல்லது நடக்காமலும் போகும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கட்சி துவங்கிய பிறகு ஷூட்டிங்கா
படத்தை நடித்து கொடுத்துவிட்டுதான் முழுக்க கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்து இருந்தார். ஆனால் கட்சியை அறிவித்து விட்டு பிறகு சூட்டிங் சொல்வது சரியாக இருக்காது என்பதால் பெரும் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.
அரசியல் அறிவிப்பு
அதேநேரம், அரசியலில் அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள், எப்படியும் அரசியல் கட்சியைத் தொடங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவரிடம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.