ஆஹா.. தலைவா...நண்பருக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டீங்களே...!
சென்னை : வழக்கமாக தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் ஒரு சிலர் தான் போட்டியிடுவார்கள். பிரசாரம் செய்யத் தான் நட்சத்திர பட்டாளமே களமிறங்கும். ஆனால் இந்த முறை முன்னணி நட்சத்திரங்கள் பலரே போட்டி களத்தில் உள்ளனர்.
இவர்களில் ஸ்டார் அந்தஸ்து நடிகர் என்ற முறையிலும், மூன்றாவதாக ஒரு கூட்டணியை தனியாக உருவாக்கியவர் என்ற வகையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
அதுவும் வேட்பாளராக களமிறங்கி இருப்பதால், சினிமா நட்சத்திரங்களுக்கு மக்கள் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள திரையுலகமே ஆவலாக உள்ளது.

ரஜினியை முந்திய கமல்
1990 களில் இருந்து அரசியலுக்கு வர போவதாக கூறி வந்தவர் ரஜினி. நேரம் வரட்டும் என கூறி வந்த ரஜினி, 2019 ல் ஒவ்வொரு ஊர் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அழைத்து, அரசியலுக்கு வரலாமா என ஆலோசனை நடத்தினார். அதற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க போய் விட்டார். கடந்த ஆண்டு இறுதியில் கட்சி துவங்க போவதாக அறிவித்த ரஜினி, இந்த ஆண்டு துவக்கத்தில் உடல் நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார். ஆனால் அரசியல் பற்றி பேசாமல் இருந்த கமல், சட்டென்று கட்சி துவங்கி விட்டார். சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அரசியலில் கமல் முந்திக் கொண்டார்.

கட்சியை துவங்கிய கமல்
ட்விட்டரில் அரசியல் பிரவேசத்தை அறிவித்த கமல் 2018 ல் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தி, கட்சி கொடி, பெயரை அறிமுகம் செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கருத்துக்களை கூறி வந்த கமல், தற்போதைய சட்டசபை தேர்தலில் போட்டியிட களமிறங்கி விட்டார். ஆனால் கமல் கட்சி துவங்கியதும் முதலில் வாழ்த்து சொன்னவர் அவரது நண்பரான ரஜினி தான்.

தேர்தலில் போட்டி
சரத்குமார் மற்றும் பாரிவேந்தருடன் கூட்டணி அமைத்த கமல், தனது மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களில் போட்டியிட போவதாக அறிவித்தார். அத்துடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட தன்னை வேட்பாளராக அறிவித்து, இன்று மனுத்தாக்கலும் செய்து விட்டார். தீவிர பிரசாரத்திலும் இறங்கி கலக்க துவங்கி விட்டார்.

வாழ்த்து சொல்லாத ரஜினி
கட்சி துவங்கியதற்தே கமலுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி, இப்போது தேர்தலில் போட்டியிடும் தனது நண்பருக்கு இதுவரை வாழ்த்து ஏதும் சொல்லவில்லை. தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு அடிக்கடி ட்வீட் செய்த ரஜினி, அரசியல் எண்ணத்தை கைவிட்டதாக அறிவித்த பிறகு ட்விட்டர் பக்கமே காணோம். அவர் கடைசியாக பொங்கல் வாழ்த்து பதிவிட்டதோடு சரி. அதற்கு பிறகு ட்விட்டர் பக்கமே வரவில்லை. அண்ணாத்த சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் தலைவர்...

ரஜினியை மிஸ் பண்ணுறீங்களா
முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் உலக நாயகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு பேட்டி அளித்த அவரிடம், அரசியல் களத்தில் ரஜினியை மிஸ் செய்கிறீர்களா? அவர் இல்லாததால் சுவாரசியம் இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறீர்களா?" என கேட்கப்பட்டது. அதற்கு கமல், நானும் ரஜினியும் என்றுமே மோதிக்கொண்டதில்லை. நாங்கள் எங்களுக்கான வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்து, கிடைத்த தருணங்களில் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அப்படித்தான் அரசியலிலும் இருந்திருக்கும். தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாமல் போவது எல்லாம் தனிப்பட்ட, அவரது முடிவு.

ரஜினியிடம் யோசனை கேட்பேன்
மறுக்க முடியாத ஒரு காரணத்துக்காகத்தான் அவர் அரசியலில் நுழைய வேண்டாம் என்று முடிவெடுத்தார். அது அவரது தனிப்பட்ட ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எனவே, அவர் எடுத்த முடிவில் அவர் நிற்கிறார். அது சரியானதே. நான் ஒன்றிரண்டு யோசனைகளைக் கேட்க அவரை அணுகலாம் என்றார் கமல். எப்படியோ இவர்கள் இருவரும் இணைந்து களம் கண்டால்தான் அது தனி ரகமாக இருக்கிறது... நண்பருக்காக ஏதாவது ரூபத்தில் ரஜினி குரல் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதும் பலரிடத்தில் இருப்பது என்னவோ உண்மைதான்.












Click it and Unblock the Notifications