மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? சட்டென வந்த அரசியல் கேள்வி.. பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்!
சென்னை: ஒரு வார கால பயணமாக இமயமலை செல்லும் ரஜினிகாந்த் இன்று காரில் இருந்தபடி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த், த.செ. ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக துபாய்க்கு சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் ரஜினி.
ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு திரும்பினார்.
இந்நிலையில் அபுதாபில் இருந்து சென்னைக்கு நேற்று திரும்பிய ரஜினிகாந்த், இன்று தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுள்ளார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார் ரஜினிகாந்த். ஜூன் 3 அல்லது 4 ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
சென்னை திரும்பிய பின்னர், 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ஆன்மீக பயணமாக இமயமலை புறப்படும் முன்பாக விமான நிலையத்திற்கு காரில் சென்ற ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இமயமலை பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், "ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். இப்போது அங்கு சென்று கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை சென்று திரும்ப இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அப்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், "சாரி, அரசியல் கேள்விகள் வேண்டாம்" என பதில் அளித்தார்.
இசையா? கவிதையா என்ற போட்டி தமிழ் சினிமா உலகில் நிலவி வருவது பற்றி உங்கள் கருத்து என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தவாறு கையெடுத்துக் கும்பிட்ட ரஜினிகாந்த், "அண்ணா.. நோ கமெண்ட்ஸ்" எனக் கூறிவிட்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications