திமுக ஓட்டு வங்கிக்கு ரஜினிகாந்தால் வேட்டு.. "52%" வாய்ப்பே இல்லை.. சர்ப்ரைஸ் புள்ளி விவரம்!
சென்னை: "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திமுகவுக்குத்தான் பாதிப்பு.. ஏன்னா.. ரஜினி ரசிகர்கள் பெரும்பாலானோர் திமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்கள்.." என்று சில நாட்கள் முன்பு கூறியிருந்தார் எச்.ராஜா. பாஜக தலைவராச்சே.. அதனால் இப்படி சொல்கிறார்.. அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்றுதான் திமுகவினர் பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், ராஜா கூறியதில் நேரடியாக பொருள் இருக்கிறதோ இல்லையோ, அவர் கூறியதன் அடிப்படையில் ஓரளவுக்கு லாஜிக் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியம் கிடையாது.
ரஜினிகாந்த் அரசியல் வருகை, யாருக்கு ஓட்டுக்களை குவிக்கும்.. யாருக்கு வேட்டு வைக்கும்.. இரண்டுமே இல்லாமல் புஸ்வானமாகுமா என்று பல கோணங்களில் பலரும் கருத்து கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, திமுகவுக்கு ரஜினி வருகை பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
10 வருடங்களுக்கு பிறகு இந்த முறை எப்படியும் ஆட்சிக்கு வர கடுமையாக முயலும் கட்சி திமுக.. ரஜினியை கொள்கை ரீதியாக தீவிரமாக எதிர்க்கும் கட்சி திமுக.. என, திமுக vs ரஜினி என்ற கோணத்தில் யோசிக்க நியாயமான பல காரணங்கள் இருக்கிறது.

திமுகவுக்கு பாதிப்பு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என திரை பிரபலங்களின் பிம்பத்தை பார்த்து ஓட்டு போட்டு பழக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள், இந்த முறை ரஜினி என்ற பிம்பத்திற்கு ஓட்டு போடுவார்கள் என்பதால், அதிமுக வாக்கு வங்கியில்தான் ஓட்டை விழும் என்பது ஒரு பார்வை. ஆனால், இது மேலோட்டமான ஒரு கருத்துதான். புள்ளி விவர ரீதியாக பார்த்தால், ரஜினி வருகை திமுகவுக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும் என்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் ஓட்டு
உதாரணத்திற்கு, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில்.. அதாவது ரஜினிகாந்த் பாணியில் கூற வேண்டுமானால், தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில்தான் 2019 லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அதில், சசிகலா அணியினர் அமமுக கட்சியாக தினகரன் தலைமையில் பிரிந்து போயினர். ஒற்றை தலைமைக்கு பழகிய அதிமுக எடப்பாடி-ஓபிஎஸ் என்ற புதிய இரட்டை தலைமையின்கீழ் தேர்தலை சந்தித்தது. திரை பிம்பம் இல்லாத தலைமை என்றும் இதைச் சொல்லலாம். இப்படியான ஒரு கடும் சோதனை காலத்திலும், அதிமுக கூட்டணிக்கு 32 சதவீத ஓட்டு கிடைத்தது. அதிமுகவுக்கு மட்டும் 18 சதவீதம் ஓட்டு வந்தது.

அதிமுகவின் பலம் இதுதான்
இந்த 18 சதவீதம் ஓட்டு, வேறு யாருக்காகவும், எதற்காகவும் அல்ல.. இரட்டை இலை என்ற சின்னத்தை மட்டுமே பார்த்து ஓட்டுப்போடும், அடிப்படை அதிமுக தொண்டர்கள் வாக்குகள். அதிமுக அதன் அடிமட்ட அளவுக்கு இமேஜ் ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும், சரிவடைந்த காலத்தில் கூட 18 சதவீத ஓட்டுக்களை பெற முடிந்துள்ளது. இப்போது 2 வருட 'கேப்பில்' எடப்பாடியார் தனது ஆளுமையை மேம்படுத்தியுள்ளார். மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூபாய் வழங்குவது போல வெகுஜன திட்டங்களை முன்னெடுத்து மக்கள் மனதில் பதிய ஆரம்பித்துள்ளார். அதிமுக வாக்குகளை கபளீகரம் செய்யும் என கூறப்பட்ட, அமமுக, இந்த காலகட்டத்தில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியான சூழலில் அதிமுக ஓட்டுக்கள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உச்சத்திற்கு போன திமுக
அதே லோக்சபா தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகளுடன் அபார வெற்றியை பெற்றது. இதில் திமுக மட்டுமே 35 சதவீத வாக்குகளை பெற்றது. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள், மதச் சிறுபான்மையினர், தலித்துகள், நடுநிலை வகிப்போர் ஆகியோர்களின் வாக்குகள் அனைத்தும் மொத்தமாக திமுகவுக்கு விழுந்ததினால்தான் 52 சதவீதம் பெற முடிந்தது என்பதுதான் உண்மை. ஏனெனில், மோடி அரசா, காங்கிரஸ் அரசா என்ற கேள்விக்கு விடை தேடும் தேர்தலாக லோக்சபா தேர்தல் இருந்தது. எனவே, அதிமுக-பாஜக கூட்டணியை விட்டுவிட்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, நாம் மேலே குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் மொத்தமாக ஓட்டு போட்டனர்.

அதிமுக வளருதே
அடுத்த ஆண்டு நடைபெறப்போவது தமிழக சட்டசபைக்கான தேர்தல். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டுமா, ஸ்டாலினை முதல்வராக்க வேண்டுமா என்பதற்கான தேர்தல் இது. எனவே, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இமேஜ் வைத்துள்ள, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மொத்த வாக்குகளும் திமுக பக்கம் சாயும் என எதிர்பார்க்க முடியாது. எனவே லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளில் ஓரளவு பங்கு அதிமுகவுக்கு திரும்பும் (இப்போதுள்ள சூழ்நிலை அடிப்படையில்). இன்னொரு பக்கம் ரஜினி கட்சியும், திமுக வாங்கிய ஓட்டு வங்கியிலிருந்துதான் ஓட்டுக்களை பெறும். அப்படியானால் ரஜினி வருகை யாருக்கு நஷ்டம்? திமுகவுக்குத்தானே!

ரஜினி வருகை
கடந்த சட்டசபை தேர்தலில், அதிமுகவுக்கு 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவின் வாக்கு 31.6 சதவீதம் ஆகும். லோக்சபா தேர்தலில் திமுக 35 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. எனவே எஞ்சிய ஓட்டுக்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரானவர்கள் போட்ட ஓட்டு. அது இம்முறை ரஜினி கட்சியால் கணிசமாக பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, ரஜினி தன்னை தீவிர வலதுசாரியாக காட்டாவிட்டால் இது சாத்தியம்தான். ஏற்கனவே லோக்சபா தேர்தலின்போது, அடிமட்டம் அளவுக்கு சென்றுவிட்ட அதிமுகவுக்கு இனி கிடைப்பதெல்லாம் லாபம்தான். ஏனெனில் இதற்கு மேலும் அவர்கள் ஓட்டு சரிய வாய்ப்பு இல்லை. ஆனால், உச்சத்திற்கு போன திமுகவுக்கு இனி இழக்கும் ஒவ்வொரு ஓட்டும் நஷ்டம்தான் என்ற அடிப்படையில் ரஜினிகாந்த் வருகை, திமுகவின் ஓட்டு வங்கிக்குத்தான் வேட்டு வைக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications