போராடிய ரசிகர்களுக்கு எதிராக ரஜினி ஆவேசம்..அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த' கதி என்னவாகும்?
சென்னை: ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது அரசியல் எதிர்காலத்தை பற்றி எப்படி தெளிவாகச் சொல்லி விட்டதோ அதே போல 'அண்ணாத்த' படம் என்ன ஆகப் போகிறது என்பதையும் அடிக்கோடு போட்டுக் காட்டி விட்டது.
Recommended Video

அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்ன பிறகும், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ரசிகர்கள் என்பதால், ஆத்திரம் அடைந்துள்ளார் ரஜினிகாந்த். இதுவரை ரஜினி மன்றம் சொல்லி அவர் ரசிகர்கள் கேட்டு நடக்காமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக வள்ளுவர் கோட்டத்தில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை அவரது ரசிகர்கள் நடத்தி உள்ளதால் ரஜினி ரொம்பவே அப்செட்.
இந்த அதிருப்தி அவர் அறிக்கையில் பல்வேறு இடங்களிலும் வெளிப்பட்டு இருப்பதை கவனிக்க முடிகிறது.

ரஜினி அதிருப்தி
ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்று ரஜினி கூறியுள்ளார். இதன் மூலம் போராட்டம் நடத்தியது தனது உண்மையான ரசிகர்கள் கிடையாது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

குழப்பத்தில் ரஜினி
அதேநேரம், என்ன நினைத்தாரோ தெரியாது.., அடுத்த வரியில் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று தனது மன்றத்தை சேர்ந்தவர்கள்தான் இதை நடத்தினார்கள் என்பது போன்ற ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தையும் அளித்துவிட்டார். அடுத்த வரியிலேயே பழையபடி தனது ஆதங்கத்தை காட்டும் வகையில், "இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது" என்கிறார். இப்படியாக அவர் தனது ரசிகர்களை எப்படி கையாளுவது என்ற விஷயத்தில் பெரிய குழப்பத்தில் இருப்பதை அறிக்கையின் ஆரம்ப வரிகள் அப்பட்டமாக காட்டுகிறது.

ரசிகர் பலம் முக்கியம்
அது எம்ஜிஆராக இருக்கட்டும் அல்லது ரஜினியாக இருக்கட்டும்.. இப்போதைய ஸ்டார்களான அஜித் அல்லது விஜயாக இருக்கட்டும். அவர்கள் திரையில் நீடித்து நிற்பதற்கும், புகழ் பெறுவதற்கும் அடிப்படை காரணம் ரசிகர்கள். சில நடிகர்கள் ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இருப்பார்கள். ஆனாலும் ரசிகர்கள் வலிமையாக இல்லாத காரணத்தால், தோல்வி படங்கள் வந்த போது அவர்கள் திரையுலகத்தில் இருந்து காணாமல் போனார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம், ராமராஜன், மோகன், பிரசாந்த் போன்றோரைக் கூறலாம். பிரசாந்த்துக்கும், ராமராஜனுக்கும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளும் திரையில் எதிரொலித்தது. ஆனால் அடுத்தடுத்து தோல்வி வந்தபோதும் ரசிகர்கள் கை கோர்த்து நின்றதால், அஜித் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து உயர பறக்க முடிந்தது.

படம் ரிலீஸ்
இப்படியான ரசிகர் கட்டமைப்பு பலமாக கொண்டவர்தான் ரஜினிகாந்த். வெறும் நடிகர் என்பதை தாண்டி, தமிழருவிமணியன் வார்த்தையில் சொல்லப்போனால் "கடவுளாக பார்ப்பவர்களும்" கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் முதல்முறையாக ரசிகர்களின் விருப்பத்திற்கு எதிராக ரஜினிகாந்த் நடந்து கொண்டிருக்கிறார். அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன் தாக்கம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தடுமாற்றம்
ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை உணர்த்தும் வகையில் பஞ்ச் டயலாக்குகள் பல செய்யப்பட்டதன் காரணமாக 1990களில் ரஜினிகாந்த் சினி உலகத்தில் தனித்து தெரிந்தார். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஆனால் இப்போது அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதால் அவர் பஞ்ச் வசனங்கள் பேசியும் பயன் கிடைக்கப் போவது கிடையாது. அதுவே கணிசமான ரசிகர்களை தியேட்டர் பக்கம் அழைத்துச் செல்லப் போவதில்லை. இப்போது ரசிகர்களுக்கு எதிராகவும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதோடு அவர்களின் கருத்துக்களை ஏற்காமல் புறக்கணித்துள்ளார்.
இது அவர் மீதான ஈர்ப்பை இன்னும் குறைத்துவிடும்.

அண்ணாத்த வணிகம்
ரசிகர் மன்றங்களின் பலம் இனிமேல் குறையும் என்கிறார்கள் இந்த துறையை அறிந்தவர்கள். ஆக மொத்தத்தில் 1990களில் பிறகு இதுவரை அரசியல் பஞ்ச் மற்றும் ரசிகர் என்று இரு பலம் கொண்டு திரையில் தோன்றிய ரஜினிகாந்த், இப்போது அண்ணாத்த படம் மூலம், இரண்டிலும் தடுமாற்றத்தோடு திரைக்கு வர உள்ளார். அரசியலுக்கு வர நேரமில்லை.. "அண்ணாத்த" திரைப்படம் நடிக்க மட்டும் உங்களுக்கு நேரமும், மனதும் இருந்ததா என்ற ரசிகர்களின் கேள்விக்கு என்ன பதில்தான் அவரால் சொல்ல முடியும்.












Click it and Unblock the Notifications