சும்மா கிடந்த ரஜினியை.. ஊதிக் கெடுத்த ஆதவ்! 1996 கண்ணு முன்னாடி வந்து போகுமில்லையா? வாய்ஸ் யாருக்கு?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் சூழலில், ரஜினிகாந்த் குறித்த தவெகவின் ஆதவ் ஆர்ஜுனாவின் பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. எப்போதும் அமைதி காக்கும் ரஜினிகாந்த் காலம் பதில் சொல்லும் என அதிரடி காட்டியிருக்கும் நிலையில், 2026 தேர்தலில் யாருக்கு அவர் 'வாய்ஸ்' கொடுக்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 1996ல் மூப்பனார் - கலைஞருக்கு ரஜினி ஆதரவு கொடுத்த நிலையில், ஜெயலலிதா படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் இந்த தேர்தல் மிகுந்த விறுவிறுப்புடன் நகர்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகியவை தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற நிலை உருவாகியுள்ளதால், கட்சிகள் மட்டுமின்றி, தனிநபர்கள், சமூக அமைப்புகள், பிரபலங்கள் என எல்லோரிடமும் ஆதரவைப் பெற கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த சூழலில், அரசியல் களத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும், பெரும் செல்வாக்கு கொண்ட நபராகவே ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். அவர் கடந்த காலத்தில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் பல முறை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1996 தேர்தல் ரஜினி தாக்கம்
குறிப்பாக 1996ஆம் ஆண்டு, அப்போது நடந்த அரசியல் மாற்றத்தில் அவரது கருத்து முக்கிய பங்காற்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் இன்று வரை குறிப்பிடுகின்றனர். அதே தாக்கத்தை 2026 தேர்தலிலும் உருவாக்க முடியுமா என்ற கணக்கில் தான் தற்போது அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. தகவல்களின் படி, திமுக தரப்பு முதலில் ரஜினிகாந்தை அணுகியதாக கூறப்படுகிறது. அந்த அணுகுமுறையில், 1996 தேர்தல் காலத்தில் அவர் வழங்கிய ஆதரவை நினைவூட்டியதுடன், இந்த முறை நேரடி அரசியல் பிரச்சாரம் தேவையில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு ஆதரவு குரல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தரப்பு
இதே நேரத்தில், பாஜக தரப்பும் அமைதியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரஜினிகாந்தின் ஆன்மிக மனப்பான்மை மற்றும் தேசிய அரசியல் நோக்கங்களை கருத்தில் கொண்டு, அவரை அணுகும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்போது பாஜகவில் இருப்பதும் இந்த முயற்சிக்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலில் நேரடியாக களம் இறங்கவில்லை என்றாலும், அவரது ரசிகர் அமைப்புகள் இன்னும் பல பகுதிகளில் செயலில் உள்ளன.
தமிழக அரசியல்
2018ஆம் ஆண்டு அவர் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றியபோது உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று வரை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலம் ஒரு பெரிய வாக்கு வங்கியை இயக்க முடியும் என்பதால், அவரது ஆதரவு அரசியல் ரீதியாக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை ரஜினிகாந்த் எந்த தரப்புக்கும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை என்பதே முக்கியமான தகவல். அவரிடம் இருந்து எந்தத் தெளிவான பதிலும் வராததால், அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
ரஜினிகாந்த் ஆதரவு
இந்த முறை தேர்தல் நான்கு முனைப்போட்டியாக மாறியுள்ள நிலையில், சில நூறு வாக்குகள் கூட வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சூழல் உள்ளது. அதனால் தான் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களின் ஆதரவு கூட தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்பு நிலவுகிறது. மொத்தத்தில், 1996 தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்தைப் போலவே இந்த முறை ஒரு அரசியல் அதிர்ச்சி நிகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான முக்கிய 'கீ'யாக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார்.
ரஜினி வாய்ஸ் யாருக்கு?
ஆனால், அவர் எந்த தரப்புக்கு குரல் கொடுக்கப் போகிறார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த 'வாய்ஸ்' யாருக்கு கிடைக்கிறது என்பதே 2026 தேர்தலின் திசையை மாற்றக்கூடிய முக்கிய காரணமாக மாறலாம். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு ரஜினியை சீண்டியிருக்கும் நிலையில், யாருக்கு அவர் ஆதரவாக பேசப் போகிறார் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பு.
1996ல் என்ன நடந்தது?
1991இல் ஜெயலலிதா ஆட்சி அமைத்த நிலையில் ஐந்தாண்டுகளில் அவருக்கு எதிரான மனநிலை தமிழகம் முழுவதும் இருந்தது. 1996 தேர்தல் நடைபெற்ற போது தனது கேரியரின் உச்சத்தில் இருந்தார் ரஜினிகாந்த். பாட்ஷா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி அவரது ரசிகர்கள் தலைவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திமுக - தமாகா கூட்டணி உருவாகி இருந்தது. ஒரு சில விவகாரங்களில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் திமுக கூட்டணிக்கு குரல் கொடுத்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனக் கூறியது தமிழக அரசியலில் பலமாக எதிரொலித்தது. அதிமுகவுக்கு எதிராக தீவிரமாக வேலை செய்தனர் ரஜினி ரசிகர்கள். அந்த தேர்தலில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 இடங்களை திமுக தமாகா கூட்டணி வென்றது. அதிமுக வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றது. அதிமுகவின் பெரும்பான்மையான அமைச்சர்கள் படுதோல்வியை சந்தித்தனர். ஒன்பது முறை தேர்தலில் வென்ற செங்கோட்டையன் கூட அந்த தேர்தலில் மண்ணை கவ்வியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications