மிஸ்டர் ரஜினி.. எதுக்கு இந்த வேலை? ‘பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்’.. அழுத்தம் கொடுக்கும் சிபிஐஎம்!
சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் தேவையில்லாமல் பொருந்தாக் கருத்துக்களை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவல்துறையே துப்பாக்கிச்சூடு துயரத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,போலீசாரை தாக்கியது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தியது அனைத்துமே சமூகவிரோதிகள் தான் என அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றியும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் போன்றவர்கள் பொது விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும் என்றும், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்திருந்தது.
தூத்துக்குடி 'ஜாலியன் வாலாபாக்' படுகொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுப் பொறுப்பு: வைகோ காட்டம்
படுகொலை - அதிர்வலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடே சுடுகாடாகிடும்
குறிப்பாக துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். அதன்பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த போராட்டத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றும், தனக்கு நன்றாக தெரியும் என்றும் உறுதிபட பேசி இருந்தார். இதுபோல போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார். ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அருணா ஜெகதீசன் அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் நடிகர் ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்தியது. சுமார் 4 ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்த ஒருநபர் ஆணையம் அதுகுறித்த அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இதையடுத்து நேற்று சட்டப்பேரவையில் விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்தது.
சமூக விரோதிகள் - ரஜினிக்கு குட்டு
அந்த அறிக்கையில் "சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினிகாந்த் ஆணைய விசாரணையில் தெரிவித்தார். ரஜினி போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். ரஜினிகாந்த் போன்றவர்கள் பொது விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்" என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரஜினியின் பொருந்தாத கருத்து
இந்நிலையில் அருணா ஜெகதீசன் கமிட்டி அறிக்கையின்படி, கொடூர துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தேவையில்லாமல் பொருந்தாக் கருத்துக்களை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இனிமேல் இப்படி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் காவல்துறையினர் திருப்பி தாக்கினார்கள்' என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிரபலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம்" எனத் தெரிவித்துள்ளார்.