ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா?
சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு போராளியாக வர வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஜனவரி மாதம் கட்சியை அறிவிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. நான் எப்போது வருவேன் என்பதை நானே அறிவிக்கிறேன், சில நிர்வாகிகள் மீது எனக்கு அதிருப்தி இருக்கிறது என ரஜினி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கொடி பிடிக்கும் தொண்டன் முடிவு எடுப்பான் என்கிற மாதிரி எந்த கட்சியும் செயல்பட முடியாது.
தொண்டர்கள் எப்போதுமே உணர்வுபூர்வமாக இருப்பார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே வைத்து ஒரு முடிவை தலைவரால் எடுக்க முடியாது. அரசியலுக்கு வரும் ஒரு தலைவர் தன்னை சுற்றியுள்ள சாதக பாதகங்கள், தான் களத்திற்கு வந்தால் யாரெல்லாம் தன்னை வரவேற்பார்கள், யாரெல்லாம் தன்னை எதிர்பார்ப்பார்கள், தங்களது முக்கியத்துவத்தை அரசியல் அரங்கத்திற்குள் உயர்த்தி கொள்ள செயல்படுவார்கள் என்பதை எல்லாம் கணிப்பார்கள்.

கொரோனா தொற்று
அத்துடன் தன்னுடைய உடல்நிலை, கொரோனா தொற்று உள்ளிட்டவற்றை பார்த்து அரசியலுக்கு வரலாமா, வர வேண்டாமா என்ற பொறுப்பு அந்த தலைவரிடம் மட்டுமே உள்ளது. அந்த தலைவர் தனது உள்ளுணர்வுகளின் அடிப்படையில், சாதக பாதகங்களை ஆராய்ந்து , அவருக்கு எந்த வகையில் அந்த அரசியல் தேவை, தேவையென்றால் எந்தவகையில் அது சாத்தியம், என்று தன்னை நம்பி தன்னை ஒரு பெரிய சக்தியாக கருதி கூட்டணிக்கு அவர் வருவார், இவர் வருவார் என கனவு காணக் கூடாது.

ரஜினிகாந்த்
அவ்வாறு கனவு காணாமல் தன்னை நம்பி, தன்னை ஒரு சக்தியாக கருதி ரஜினிகாந்த் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். என்ன முடிவு எடுத்தாலும் ரஜினியின் முடிவுதான் இறுதி முடிவாகும். அவருக்கான காலங்கள் இல்லை என்ற கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

ரஜினி
ரஜினியாகவே பகுத்தாய்வு செய்து அவராகவே தன்னிச்சையாக அவர் எடுக்கும் முடிவை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய கருத்து அவரது உடல்நிலை இருக்கும் சூழலில் யாரும் அவரை வற்புறுத்தக் கூடாது, வற்புறுத்த முடியாது என்பது என் கருத்து.

பலம்
இதையும் மீறி அவர் வருவதாக இருந்தால் , தன்னை நம்பி மட்டுமே வர வேண்டும். தான் பெரியவர் என்ற நம்பிக்கையில் வர வேண்டும். காரணம் அவரது பலம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தனது பலத்தை மிகப் பெரிய அளவில் நிரூபிப்பேன் , எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நான் எம்ஜிஆர் மாதிரி வருவேன் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே அவர் வரவேண்டும்.

கட்டாயமில்லை
ஒருவேளை அவருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது என்றால் இந்த சூழலில் அவர் வரவேண்டியது கட்டாயமில்லை என்பது என் கருத்து. ரஜினி போராளியாகவும் நேர்மறையான சமூக நீதியை நிறைவேற்றக் கூடியவராக அவர் வர வேண்டும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.












Click it and Unblock the Notifications