சாத்தான்குளம் மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் போனில் பேசி ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!
சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசி நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையைத் திறந்து வைத்திருந்தனர். இதனால் அவர்களை சாத்தான்குளம் போலீசார் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். இதில்
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் இருவரையும் மாஜிஸ்த்திரேட்டிடம் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். ஆனால் கிளை சிறையில் அடைத்த அன்றே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

பொதுமக்கள் புகார்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் காவல்துறையினர் கடுமையாக தாக்கி அடித்ததில் அவர்கள் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினார். காவல்துறை தாக்குதலால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர்களுக்கு நேர்ந்தது கொடூரமான அநீதி என பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையும் தாண்டி நாட்டையே உலுக்கி உள்ளது.

நடிகர்கள் வலியுறுத்தல்
இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர், தொழில் அதிபர்கள் என ன பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் கண்டனம்
தமிழக நடிகர்களான கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, இயக்குனர் ஹரி , ஜெயம் ரவி, விஷால், நடிகைகள் ஹன்சிகா, பிரியங்கா சோப்ரா, தமன்னா உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் இதுவரை தனது கருத்தை வெளிப்படுத்தாததை பலரும் விமர்சித்தனர்.

போனில் பேசிய ரஜினி
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.. இந்த தகவலை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications