முதல்வர் ரேஸில் இருந்து ஒதுங்கிய ரஜினி... ரூட் கிளியர் ஆனதால் உற்சாகத்தில் திமுக
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ஒதுங்கியது திமுக முகாமை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
Recommended Video
முதல்வர் பதவியை கனவில் கூட தாம் நினைத்து பார்த்ததில்லை என்றும், அந்த பதவி தனக்கு பொருத்தமாக இருக்காது எனவும் ரஜினிகாந்த் பேசியதை திமுக ரசிக்கத் தவறவில்லை.
மேலும், ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு, அதேபோல் அவர் கைகாட்டும் நபருக்கு மக்கள் மத்தியில் கிடைக்காது என்பது திமுகவின் நம்பிக்கை.

ரஜினி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த்தை மையமாக வைத்து தமிழக அரசியலில் பல கற்பனைக் கதைகளும், வதந்திகளும் பரவி வந்த நிலையில் தனது நிலைப்பாட்டை இன்று மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதாவது தேர்தல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது என்பதை கூறிவிட்டார். இதன் மூலம் தேர்தலில் ரஜினி போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் முதல்வர் வேட்பாளரும் தாமில்லை என்பதை ரஜினி தெரிவித்துவிட்டார். இதனை திமுக தரப்பு மவுனமாக வரவேற்று உற்சாகம் கொண்டிருக்கிறது.

வெற்றி எளிது
நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிட்டால் களத்தில் நெருக்கடி அதிகமாக இருக்கும் என கருதிய திமுகவுக்கு, ரஜினியின் இன்றைய அறிவிப்பு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல் அமைந்துவிட்டது. காரணம் ரஜினியை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக நின்றாலும் அந்த நபரை தோற்கடிப்பது திமுகவிற்கு ஒரு பெரிய வேலையல்ல. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களில் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது என உற்சாகம் பொங்க கூறுகின்றனர் திமுகவினர்.

ஆளுமைகள்
மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ஆளுமைகளுக்காக தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்குகள் கிடைக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகளுக்காகவே திமுக, அதிமுகவை மாறி மாறி மக்கள் தேர்ந்தெடுத்தனர். இன்று அவர்கள் இருவருமே இல்லாத நிலையில், மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தன்னை ஒரு தனிப்பெரும் ஆளுமையாக கட்டமைத்துவிட்டார். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை வரும் தேர்தலில் அந்தக் கட்சி பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்துதான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸின் செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும்.

கட்டமைப்பு
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமான சின்னம் ஒன்று உதயசூரியன், இரண்டு இரட்டை இலை. இந்த இரண்டு சின்னங்களை தவிர்த்து வேறு எந்த சின்னங்களை பற்றியும் அறியாத வாக்காளர்கள் பல கோடி பேர் தமிழகத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தாம் தொடங்க உள்ள கட்சிக்கு நிர்வாகிகளே வேண்டாம் என்ற மனநிலையில் உள்ள ரஜினிகாந்த், ஒரு புதிய முகத்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி அதில் வெற்றி காண்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications