விடுவிக்கும் நடவடிக்கையை எப்போது தொடங்குவீர்கள்? ஆளுநருக்கு கடிதம் எழுதிய முருகன்
சென்னை:ராஜிவ் காந்தி கொலை வழக்கில், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். வேலூர் சிறையில் இருக்கும் முருகன் அங்கிருந்தபடியே கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:
எங்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அனுப்பிய ஆவணம் தங்களது ஒரு கையொப்பத்திற்காக 5 மாதங்களாக காத்துக் கிடக்கிறது.
தனக்கு உண்மை அறியும் சோதனை நடத்தினால் தான் நிரபராதியா, இல்லையா என்ற உண்மையினை ஆளுநரும், நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும். அதற்கான ஒரு தகுந்த உத்தரவினை ஆளுநர் வழங்கிட வேண்டும்.
எதிர்பார்ப்புக்களும், நம்பிக்கைகளும் மிகுந்த வலிகளை தருவதாகவும், இறைவனின் பாதங்களில் தனதுயிரை முழுமையாக சரண் செய்ய சங்கற்பம் செய்து ஆகாரத்தினை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளேன். சிகிச்சை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தாமல் இருக்க உரிய உத்தரவுகளை வழங்கிட வேண்டும் என்று முருகன் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முருகன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.