ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்!
சென்னை: ராஜ்ய சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் மற்றும் ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கிரிஷ் சோடங்கர், இந்தியா கூட்டணியின் மாற்றங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. இதனால் 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜ்ய சபா எம்பி பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்ததால், ராஜ்ய சபா இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18ஆம் தேதி ராஜ்ய சபா இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தவெக சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளரே வெற்றி பெறுவார். இதனால் தவெக ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.
இதன் காரணமாகவே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார். சென்னை வந்த கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும்.
இரு கட்சிகளும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். முதல்வர் விஜய் தமிழ்நாட்டின் உயர்ந்த தலைவர். விஜய்யும், ப.சிதம்பரமும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சந்திப்பு நிச்சயமான தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை டெல்லி தலைமையே முடிவு எடுக்கும். திமுக இதுவரை இந்தியா கூட்டணியின் அங்கமாகவே இருக்கிறது. இருப்பினும் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள சூழலில், இதில் எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications