ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்!
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாளாக இருந்தும், தற்போது வரை திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் பகிர்வதில் இழுபறி நிலவுவதால் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்று, திமுக, அதிமுக, தேமுதிக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. அதில் என்.ஆர். இளங்கோ, செல்வராசு, தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. அதன்படி, திமுகவில் திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக செய்தித்தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றினை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது திமுக. இன்னொரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தயாராக உள்ளது திமுக. காங்கிரஸ் கூட்டணிக்கு வராதபட்சத்தில் எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மார்ச் 5 ஆம் தேதியான நாளை மாநிலங்களவை விருப்ப மனுதாக்கல் இறுதி நாளாக இருந்தும் தற்போது வரை திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தான் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் இன்றுக்குள் திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பில் ஒரு இடம் பாமக கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. மற்றொரு இடம் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரைக்கே ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணி தரப்பில் மாநிலங்களவைக்கு யார் யார் போட்டி என்பது இன்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications