பெரியார் பல்கலை.யில் அரசியலுக்கு தடையா? தமிழ்நாட்டில் அரசியல் வளர்ந்ததே கல்லூரிகளில்தானே - ராமதாஸ்
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பறிக்கும் செயலாகும்

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் அரசியலுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் அரசியலை வளர்த்தன; அவை தான் அரசியல் நாற்றங்கால்களாக திகழ்ந்தன. அவற்றை சிதைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது!
தமிழக அரசின் சுற்றறிக்கைப்படி தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருக்கிறார். இந்தத் தடைக்கு யார் காரணமாக இருந்தாலும் அது தவறு தான். தடை விதிக்க தூண்டியதா? என்பது தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!
அரசியலும் ஓர் அறிவு தான். அரசியல் செயல்பாடுகளால் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது; மாறாக பண்படும். எனவே, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications