"ராமாயணம் கற்பனை".. கொதித்து எழுந்த நயினார்.. கலாய்த்து தள்ளிய அப்பாவு.. ஸ்டாலின் தந்த ஆவேச பதிலடி
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சேது சமுத்திர கால்வாய் திட்டம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது.
சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் இன்று அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்து உள்ளார். அவரின் தனி தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.
கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்தே இன்று தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

உரை
இந்த நிலையில் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, ராமாயணம் ஒரு கற்பனை என்று இந்திய அரசியல் தலைவர்கள் பலர் சொல்லி இருக்கிறார். அண்ணல் காந்தி தொடங்கி அரசியல் தலைவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இதை உறுதி செய்துள்ளனர். அதனால் சேது சமுத்திர திட்டத்தை தொடங்கி ஆக வேண்டும். இந்த திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம். இந்த திட்டம் வந்தால் நாகையில் கடல் போக்குவரத்து அதிகம் ஆகும். நாகை வேகமாக வளர்ச்சி அடையும். அதனால் இதை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்?
இதையடுத்து பேச பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எழுந்தார். ஆனால் அவர் எழுந்துவிட்டு ஒரு நிமிடம் பேசாமல் நின்றார். இதை பார்த்து சபாநாயகர் அப்பாவு.. ரொம்ப யோசிக்காதீங்க என்று கூறினார். இதையடுத்து தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், முதல்வர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறார். அதை ஆதரிக்க வேண்டுமா.. இல்லையா என்று மட்டும்தான் உறுப்பினர்கள் பேச வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு ராமாயணம் கற்பனை, அது உண்மை இல்லை என்றெல்லாம் பேச கூடாது என்று கூறினார்.

அப்பாவு
உடனே குறுக்கிட்ட அப்பாவு.. அவராக சொல்லவில்லை. பல தலைவர்கள் சொன்னதைத்தான் அவர் குறிப்பிட்டு பேசினார் என்றார். அதற்கு நயினார், அதை இங்கே சொல்ல கூடாது. அப்படி பூசி மொழுக கூடாது என்றார். பூசி மொழுக அது ஒன்றும் சாந்து கிடையாது என்று அப்பாவு கூறினார். தொடர்ந்து பேசிய நயினார், ராமரை நாங்கள் தெய்வமாகி வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. ஆனால் சிபிஎம் எம்எல்ஏ பேசியது தவறு. இது இனியும் நடக்க கூடாது.

நயினார்
இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். எங்கள் உணர்வுகளை புண்படுத்தும் செயல் இது. தெய்வ வழிபாட்டை குறை சொல்லி இருக்கிறார்கள். அதனால் அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்பாவுவோ.. நீங்கள் சொன்னதும் இருக்கட்டும், அவர் பேசியதும் இருக்கட்டும். அவர் குறை சொல்லவில்லையே என்று கூறினார். அதற்கு நயினார்.. தெய்வ வழிபாட்டை அவர் குறை சொல்லித்தான் பேசி இருக்கிறார் என்றார்.

ஸ்டாலின்
இதை கேட்டதும் உடனே எழுந்த முதல்வர் ஸ்டாலின், இங்கே யாரும் தெய்வ வழிபாட்டை பற்றி தவறாக பேசவில்லை. அதை சுட்டிக்காட்டி நலத்திட்டத்தை தடுத்து விட்டனர் என்பதைத்தான் பேசி உள்ளனர் என்று ஆவேசமாக் பதிலடி கொடுத்தார். இதையடுத்து நாகை மாலி மீண்டும் பேச முயன்ற போது அப்பாவு அவரை அமரும்படி கூறினார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். வாஜ்பாய் காலத்தில் இதற்காக சோதனைகள் செய்யப்பட்டன.

ஆதரவு
மன்மோகன் சிங் காலத்தில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. கருணாநிதி இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளார். ஆனால் இந்த பகுதி ஆழம் இல்லாத பகுதி. இங்கே மண் எடுக்க எடுக்க மண் சரியும். ஆனாலும் இது தெய்வமாகி மதிக்கப்படும் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம். அதை எல்லாம் நினைவில் வைத்து இங்கே கட்டுமானத்தை தொடங்க வேண்டும். அதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு பாஜக ஆதரவு தரும். அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.












Click it and Unblock the Notifications