ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! இனி பொருட்களை ஈஸியா வாங்கலாம்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணக்காரர்களை விட உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதாவது இந்திய மக்கள் தொகையில் வெறும் 10 சதவிகித பணக்காரர்களிடம் நாட்டின் வளத்தில் சுமார் 57% இருக்கிறது. ஆனால் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் 50% ஏழை மக்களிடத்தில் வெறும் 13 சதவிகித சொத்துக்கள் மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் சமூகத்தில் ஒரு ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது. இந்த 50% மக்கள் ஆண்டுக்கு ரூ.53,610 மட்டுமே வருமானம் ஈட்டுகிறார்கள். இதே பணக்காரர்களாக இருக்கும் 10 சதவிகித மக்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.11,66,520 சம்பாதிக்கின்றன. இது ஏழை மக்களின் வருமானத்தை விட 20 மடங்கு அதிகமாகும்.

இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் பல்வேறு குற்ற செயல்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. இந்நிலையில் இதனை உடைக்க வேண்டும் என்று அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான் ரேஷன் பொருட்கள் விநியோகம். ஏழை மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என அரசு ரேஷன் மூலம் உணவு பொருட்களை மானிய விலையில் விநியோகிக்கிறது. இந்த ரேஷன் விநியோக முறை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கு ஏற்ற உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பொதுவாக அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டாலும் மலை மற்றும் அதை சார்ந்த இடங்களில் சிறு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் 248 கிடங்குகள் இருக்கின்றன. இதிலிருந்து 34,792 ரேசன் கடைகளுக்கு பொருட்கள் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. அதேபோல உணவு பொருட்களுடன் சேர்த்து மண்ணெண்ணெய்யும் விநியோகிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு அவ்வப்போது சில புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. சமீபத்தில் கூட ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சோதனை முயற்சியாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற மாவட்டங்களில் விநியோகிக்கப்படும்.
அதேபோல ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பொருட்களை வாங்கும் நடைமுறையும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறுகையில், "ரேஷன் கடைகளில் பணப்பரிவர்த்தனை எளிதாக்கும் விதமாக கியூ.ஆர்.கோடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காஞ்சிபுரத்தில் பதிவாளர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் இந்த கியூ.ஆர்.கோடு நடைமுறை முழுமையாக அமல்படுத்தப்படும்" என்று அமைச்சர் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications