குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் கடைகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை சனிக்கிழமை (நாளை) திறந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை சார்பில் நியாயவிலைக் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 21 லட்சம் பேர் ரேஷன் அட்டைதாரர்களாக உள்ளனர். இதில், 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை மாதம் தோறும் ரேசன் கடைகளில் பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. சர்க்கரை, உப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இந்தப் பொருள்களை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் அளித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என்று புகார்கள் வந்தன. அரிசி, சர்க்கரை போன்றவை மட்டுமே முறையாக விநியோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது. மேலும், சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு வாங்குவதற்கு மாதக் கடைசியில் வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர் என்ற புகார் இருந்தது.
இதைத்தொடர்ந்து, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை பொதுமக்களுக்கு தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், பாமாயில் மற்றும் துவரம்பருப்பு வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று தமிழ்நாடு உணவு வழங்கல் பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை சனிக்கிழமை (நாளை) திறந்து அனைத்துப் பொருள்களையும் வழங்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை என்று கூட்டுறவுத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து ரேஷன் கடைகளையும் நாளை (ஆகஸ்ட் 31) திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும்.
கடையைத் திறக்கவில்லை எனில் ரேஷன் கடை விற்பனையாளா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை கூட்டுறவு சாா்பதிவாளா், முதுநிலை ஆய்வாளா் ஆகியோா் கவனத்தில் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதையும், முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகளுக்கு முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications