விநாயகர் சதுர்த்தி திருவிழா.. ரேஷன் கடைகளுக்கு விடுமுறை எப்போது?.. தமிழக அரசு அரசாணை
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தந்த மாநில கலாச்சாரங்களுக்கு ஏற்ப அவரவர் விநாயகருக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.

அந்த வகையில் தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு கொழுகட்டை,எள்ளு உருண்டை, சுண்டல் ஆகியவற்றை வைத்து படைப்பது வழக்கம். பின்னர் 3ஆவது நாள் விநாயகரை கரைப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் இடங்களில் வைத்துவிடுவார்கள்.
இந்த நிலையில் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் திதி, நட்சத்திரம், உள்ளிட்டவற்றை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் என இரு வகைகள் உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி என திருக்கணித பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17 ஆம் தேதி என குறிப்பிட்ட தமிழக அரசு அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் போதிலும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இப்படி 3 விதமான தேதிகளால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் ஜோதிடர்களோ விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தான். பொதுவாக அமாவாசையில் இருந்து 4ஆவது நாள் சதுர்த்தி திதி வரும். அதன் அடிப்படையில்தான் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4ஆம் நாளான செப்டம்பர் 18ஆம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி அடுத்த நாள் 19ஆம் தேதி 11.44 மணிக்கு முடிவடைகிறது.
எனவே தமிழகத்தில் 18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி என்றும் செப்டம்பர் 19 இல் வடமாநிலத்தவர்கள் கொண்டாடுவர் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பை ரத்து செய்துவிட்டு 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என இந்து அமைப்புகளை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியில் மாற்றத்தை தமிழக அரசு கடந்த 31 ஆம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கெனவே செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை என்ற அரசாணையை நீக்கிவிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை என்ற புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பொதுவாக ஞாயிறுகளில் கடை உண்டு) விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி 18 ஆம் தேதிதான் என உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ரேஷன் கடைகளுக்கான விடுமுறை நாளை 17 ஆம் தேதியிலிருந்து 18 க்கு மாற்றியுள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications