ஏடிஎம்களில் பணம்.. தெய்வத்துக்கே மக்களின் கஷ்டம் கேட்டிருச்சு.. ரிசர்வ் வங்கி சூப்பர் உத்தரவு
சென்னை: மக்களுக்கு அதிகமாக கிடைப்பதற்காக ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு சென்னை, கோவை உள்பட பல்வேறு பெரிய நகரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. குறைந்த மதிப்பு கொண்ட 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான ஏடிஎம்களில் வைக்கப்படுவது இல்லை. மிக அபூர்வமாகவே 100 ரூபாய் நோட்டுகளை பார்க்க முடிகிறது.

500 ரூபாயை எடுத்து கொண்டு கடைகளில் பொருட்களை வாங்க சென்றால் சில்லறை இல்லை என்றே பதில் வருகிறது. இப்போது எல்லாம் பெட்ரோல் பங்கில் கூட 500 ரூபாய்க்கு சில்லறை மாற்றுவது கடினமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மட்டுமே சில்லறை வாங்க முடியும் என்கிற அளவிற்கு நிலைமை இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஏடிஎம்களில் 200 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டிய நிலை இருக்கிறது.
ஆகவே இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications