2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மாற்ற அனுமதி.. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மேஜர் அறிவுறுத்தல்
சென்னை: நாளை முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி சில முக்கிய அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கருப்பு பணம் அதிகரித்து விட்டதாகவும், இதனை ஒழிக்க அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும் மத்திய அரசு அடிக்கடி கூறி வந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார்.

கருப்பு பணம் ஒழிப்பு: மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது.
புதிய ரூபாய் நோட்டு: இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுகளின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது.
மவுசு குறைந்த ரூ.2000: இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை. எனவே இதன் பயன்பாடு வெகுவாக குறைந்தது. ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
தூய்மை ரூபாய் தாள்: இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடிதம்: எனவே நாளை முதல் வங்கிகளில் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில் அனைத்து வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வங்கிகள் குடிநீர், நிழலில் காத்திருக்கும் வசதி போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும்.
அறிவுறுத்தல்: அதேபோல வங்கிகளில் மாற்றப்படும் 2,000 நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகள் பராமரிக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் எப்போது கேட்கப்பட்டாலும் அப்போது கொடுக்கப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் இது போன்று சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களிடம் அடையாள அட்டையின் நகல் கேட்கக்கூடாது என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications