நாடு முழுக்க உள்ள வங்கிகளுக்கு.. ஆர்பிஐ தந்த ப்ரீ ஹேண்ட்.. ஒட்டுமொத்த விதியே மாறுது.. தரமான முடிவு
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வணிக வங்கிகள் துணை நிறுவனங்களை அமைப்பதற்கு முன் அதன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஒரு வங்கி தனக்கு என்று ஒரு துணை உருவாக்க வேண்டும் என்றால்.. அதற்கு அனுமதி கேட்க வேண்டி இல்லை.
அனால் இந்த மாற்றம் காப்பீடு அல்லது சொத்து மேலாண்மை போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் துணை நிறுவனங்களை அமைப்பதற்குப் பொருந்தாது. அத்தகைய சூழ்நிலைகளில், வங்கிகள் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம்.

இந்த நடவடிக்கை, நிதித் துறையில் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துவதையும், வங்கிகள் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஆர்பிஐயின் பரந்த இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. அதே சமயம் புதிய துணை நிறுவனத்தின் வணிகம் வங்கியின் முக்கிய செயல்பாடுகளை நகலெடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் புரிவதை எளிதாக்குவதற்கும், வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த விதிகள் வீட்டு லோன் தொடங்கி பலவற்றில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிப்படி ஒரு நிறுவனத்திற்கு வங்கி அமைப்பு வழங்கும் ₹10,000 கோடி கடன் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி சார்ந்த கட்டுப்பாடுகள் தொடரும். அதாவது ஒரு நிறுவனத்திற்கு ஒரு வங்கி ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க முடியும். வங்கிகள் வேண்டுமானாலும் இதற்கு எதிராக விதி கொண்டு வரலாம். ஆனால் இதுவரை இருந்து வந்த ஆர்பிஐ விதி இனி இருக்காது.
ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு குறிப்பிட்ட கடன் வாங்குபவருக்கு அதன் நிகர மதிப்பில் 20 சதவீதமும், ஒரு குழுமத்திற்கு 25 சதவீதமும் மட்டுமே வழங்க முடியும். கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் துறைகளுக்கான வங்கிக் கடன்கள் 10 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிதி அல்லாத வங்கிகள் (NBFCs) மீதான இடர் எடைகளைக் குறைப்பதன் மூலம் உள்கட்டமைப்பு நிதி செலவைக் குறைக்கவும் மத்திய வங்கி முன்வந்துள்ளது. பங்குகள், ஆரம்பப் பொதுப் பங்குகள் (IPOs) உட்பட, முதலீடு செய்ய கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பங்குகளை அடமானம் வைத்து வங்கிகள் வழங்கும் கடன்களின் வரம்பை ₹20 லட்சத்தில் இருந்து ₹1 கோடியாகவும், IPO நிதி வரம்பை ₹10 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாகவும் உயர்த்த ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. பூடான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வீட்டு லோன்களை அதிகம் வழங்கவும் ஊக்குவிக்கும் வகையில் விதிகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் குறையும் ரெப்போ ரேட்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு நிகழ்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பல வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்புள்ளது.
கடந்த முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications