விராட் கோலியின் ஒரு விக்கெட்.. ஆர்சிபி கதையை முடிக்க முடியும்.. பாண்டிங் - ஸ்ரேயாஸ் திட்டம் அதுதான்!
அகமதாபாத்: ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை முழுக்க முழுக்க விராட் கோலியின் ஆட்டத்தை நம்பியே பெரும்பாலும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் தொடக்கத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினால், அந்த அணியின் ஸ்கோரை எளிதாக 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் இன்று மாலை மோதுகின்றன. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் புதிய சாம்பியனாக ஒரு அணி உருவாக உள்ளது. இதனால் இரு அணிகளின் ஆட்டம் மீதும் ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் பைனல்
ஆர்சிபி அணியை பொறுத்தவரை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். ஏற்கனவே அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் விராட் கோலியின் மகுடத்தில் ஐபிஎல் கோப்பையும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விராட் கோலி பேட்டிங்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி கோப்பையை வெல்வதும் விராட் கோலியின் கைகளிலேயே உள்ளது. ஏனென்றால் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை முழுக்க முழுக்க விராட் கோலியை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த சீசனில் விராட் கோலி 15 போட்டிகளில் விளையாடி 8 அரைசதம் உட்பட 614 ரன்களை விளாசி இருக்கிறார்.
அடித்தளம் அமைக்கும் கோலி
பவர் பிளே ஓவர்களில் விராட் கோலி அதிரடியாகவும், மிடில் ஓவர்களில் நிதானமாகவும் ரன்களை சேர்த்து வருகிறார். அவர் கொடுக்கும் தொடக்கம், பின் வரும் வீரர்களுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைகிறது. இதனால் ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் விராட் கோலி அந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தால், எளிதாக 220 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும்.
பஞ்சாப் திட்டம்
அகமதாபாத் போன்ற ஃபிளாட் பிட்ச்களில் ஆர்சிபி போன்ற வலிமையான பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த இயலாத விஷயம். ஆனால் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினால், பஞ்சாப் அணியால் அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும். இதனால் பஞ்சாப் அணியின் முதன்மை திட்டமாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதாக இருக்கும்.
2 ஸ்பின்னர்கள் தாக்குதல்
விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினாலே பின் வரும் வீரர்களின் விக்கெட்டை அழுத்தம் கொடுத்தே வீழ்த்த முடியும். இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், சாஹல் மற்றும் ஹர்ப்ரீத் பரார் ஆகியோர் மிக முக்கியமான பவுலர்களாக இருப்பார்கள். இதனால் ஆர்சிபி அணி வெல்ல வேண்டுமென்றால் விராட் கோலி 13 ஓவர்கள் வரை களத்தில் இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications