தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா? மாலை இறுதி முடிவு என தகவல்
சென்னை: தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் ஒருசில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது தொடர்பான புகார் மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளை சேர்ந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து கோரிக்கை எழுந்துள்ள வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவு நடத்தலாமா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்து அறிக்கை தர பணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மக்களின் சக்தி தான் உயர்ந்தது... காங்கிரஸ் நம்புகிறது... பிரியங்கா காந்தி பேச்சு
சிறிய அளவிலான வன்முறை, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி, கள்ள ஓட்டுக்கள் போட முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை காரணமாக கூறி குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரியுள்ளதாக குறிப்பிட்டார். எனவே இன்று மாலைக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க உள்ளனர்.
அவர்களின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகு தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய முடிவு மாலைக்குள் அறிவிக்கப்படும் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.