உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல மோடி தான் - தாராபுரத்தில் ஓபிஎஸ் புகழாரம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. எனவே, நீங்கள் கூறுவதுபோல் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தினை அடுத்து அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று அதை நீக்கியர் பிரதமர் மோடி. அவர்தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைத்து பேசினார் பிரதமர் மோடி.
வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டு அனைவரையும் பேச அழைத்தார் பாஜக மாநில தலைவர் எல். முருகன். மோடி பேசுவதற்கு முன்பாக பேசிய துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக அரசு பத்தாண்டுகளாக செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அறிமுகம் செய்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், மத்திய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான், நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை நீக்க அதிமுக அரசு கோரிக்கை வைத்த அன்றே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. எனவே, நீங்கள் கூறுவதுபோல் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான் என்றார். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்று புகழாரம் சூட்டினார் ஓ.பன்னீர் செல்வம்.