எம்ஜிஆர் முகம் முழுக்க சிவப்பு பெயிண்ட்.. சென்னையில் அதிர்ச்சி! குவிந்து வரும் அதிமுகவினர்.. பரபர!
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் அதிமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிங்கராயன் தெருவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் சிலை அமைந்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த சிலையை திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் ஆகிய தினங்களில் ஏராளமான தலைவர்கள் தொண்டர்கள், இந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இந்த நிலையில் இந்த எம்ஜிஆரின் மார்பளவுச் சிலையில் மர்ம நபர்கள் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி அதிமுகவினர் இந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு தினமும் மாலை அணிவிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று காலை வழக்கம்போல் மாலை அணிவிக்கச் சென்ற அதிமுகவினர், எம்ஜிஆர் சிலை மீது முகத்தில் பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் உச்சத்தில் இருந்தபோது சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆரின் சிலையை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications