அலைச்சல் வேண்டாம்; இனி ஈசியா பத்திரப்பதிவு! .. உங்க ஊரிலேயே எந்த ஊர் சொத்துக்கும் பத்திரப்பதிவு
சென்னை: பத்திரப்பதிவை எளிமையாக்க 'ஸ்டார் 3.O' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த மாற்றம் பத்திரப்பதிவுத் துறையைப் பொறுத்தவரைப் பெரிய புரட்சி என்கிறார், இந்தத் துறை வல்லுநரான ஆறுமுகநயினார்.

விரைவில் 'ஸ்டார் 3.O' திட்டம்: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஆன்லைன் பத்திரப்பதிவை, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எளிமைப்படுத்த, 'ஸ்டார் 3.O' மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுப் பணிகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகவே உருவாக்கப்பட்ட 'ஸ்டார் 2.O' என்கிற மென்பொருள் தற்போது பயன்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக, பத்திரப்பதிவை இன்னும் எளிமையாக்கும் வகையில், 'ஸ்டார் 3.O' மென்பொருள் உருவாக்கப்படும் என பதிவுத்துறை அறிவித்திருந்தது.

இதற்காக பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, 'ஸ்டார் 3.O' திட்டத்துக்கு மென்பொருள் எளிமையாக்கல் குழு, சென்னை மண்டல டி.ஐ.ஜி. சேகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தக் குழு அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கருத்தின்படி அரசு தன் இறுதி ஒப்புதலை வழங்கும்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, முறைகேடான பத்திரப்பதிவுகளை பதிவு அலுவலரே ரத்து செய்யலாம் என சட்டத்திருத்தம் செய்து, அது நடைமுறையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 20 கோடி சொத்து மீட்பு: இதன் மூலம் ஒரே நாளில் ரூ.20 கோடி சொத்துக்களை முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார்.
இந்தத் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைச் செய்த பெருமை முதலமைச்சர் ஸ்டாலினையே சாரும்.

மேலும், எந்த மாவட்டத்தில் சொத்து இருந்தாலும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே, பத்திரத்தைப் பதியும் புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. விரைவில், முதலமைச்சர் ஸ்டாலின் இதைத் தொடங்கிவைக்கிறார்.
இது குறித்து முன்னாள் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரியும் வழக்கறிஞருமான எ. ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.
பல வகைகளில் தமிழ்நாடு எப்படி முன்னோடியாக திகழ்கிறது என்பதை அவர் விளக்கினார்.

வழிகாட்டி மதிப்புக்கு தமிழகம் முன்னோடி: "பத்திரப்பதிவுத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு பல விதங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. வழிகாட்டி மதிப்பீடு என்ற ஒரு முறையை முதன்முதலாக அறிமுகம் செய்ததே தமிழ்நாடுதான். பிறகுதான் இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின.
"பத்திரப்பதிவுச் சட்டத்தில் 30(2) என்ற ஒரு சட்டப்பிரிவு இருந்தது. அதன்படி இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ள சொத்துக்களையும் சென்னையில் உள்ள மூன்று மையங்களில் பதிவு செய்துகொள்ள முடியும் என இருந்தது.
அதாவது, அந்த முறை இருந்த காலம், தமிழ்நாடு, மெட்ராஸ் பிரசிடென்சியாக அதாவது சென்னை ராஜதானியாக இருந்தது. அந்தக் காலத்தில் சென்னைக்கு என்று ஒரே ஒரு பதிவாளர்தான் இருந்தார். அதன்பின் சென்னை, செங்கல்பட்டு எனப் பத்திரப்பதிவு செய்வதற்காக இரண்டு மண்டலங்கள் இருந்தன. பிறகு 1974இல் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அதிலும் கூட இந்தியாவில் எந்தப் பகுதியிலிருந்து சொத்துகளைப் பதிவு செய்துகொள்ள ஒரு பிரிவு இருந்தது. ஆனால், அதில் பல மோசடிகள் நடப்பதாகப் புகார்கள் வந்தன. ஆகவே 1988இல் அந்தப் பிரிவை நீக்கினார்கள்." என்றவர், தொடர்ந்தார்.

படிப்படியாக நடந்த மாற்றங்கள்: "பிறகு, தமிழ்நாட்டுக்குள் எந்தப் பகுதியில் சொத்து இருந்தாலும் அதை மட்டுமே பத்திரப்பதிவு செய்யலாம் என்றார்கள். பிறகு அதையும் நீக்கினார்கள். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சொத்துகளை அம்மாவட்ட வரம்புக்குள் வரும் சார்- பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என அறிவித்தார்கள்.
ஆனால், அப்போது இன்னொரு சலுகை தந்தார்கள். அது என்னவென்றால், ஒருவர் திருநெல்வேலியில் ஒரு சொத்து, திருச்செந்தூரில் ஒரு சொத்து, சென்னையில் ஒரு சொத்து என 3 இடங்களில் சொத்து வைத்திருந்தால், அவர் மூன்று மாவட்டங்களில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்கள் சென்று பத்திரப் பதிவு செய்ய வேண்டாம்.

இந்த ஊர்களில் ஏதேனும் ஒரே சார்- பதிவாளர் அலுவலகத்தில், மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பத்திரமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என ஒரு கூடுதல் சலுகையை அளித்தார்கள். அந்தப் பிரிவு இப்போதுவரை உள்ளது. அது நீக்கப்படவில்லை.
அற்புதமாக நடக்கும் இணையப் பதிவு: இதில் கூடுதல் வசதியாக ஆன்லைன் பத்திரப்பதிவு சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அது பொது மக்களுக்குப் பயனளிக்கும்படி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது" எனப் பாராட்டினார்.
விரைவில் வரவுள்ள - எந்த ஊரில் உள்ள சொத்துகளையும் ஒரே அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யக்கூடிய திட்டத்தால் எந்த அளவில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டோம்.

அதற்கு அவர், " சென்னையில் வசிக்கும் ஒரு முதியவரின் பூர்வீகம் கன்னியாகுமரி. அங்குதான் அவருக்கு இருக்கும் சொத்தை, உறவினர் ஒருவருக்கு மாற்றித்தர விரும்புகிறார். இதற்கு இதுவரை என்ன நடைமுறை? கன்னியாகுமரி சார்- பதிவாளர் அலுவலகத்திற்கு அவர் சென்றாகவேண்டும். முதியவரான அவர் எப்படி இவ்வளவு தொலைவு பயணிக்க முடியும்? அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா? ஆகவேதான் இந்தப் புதிய திட்டத்தை அரசு கொண்டுவருகிறது.
அலைச்சல் இல்லை; நேரம் மிச்சம்: இந்த மாற்றம் பலவகைகளில் பொது மக்களுக்குப் பயனளிக்கும். தேவையில்லாத அலைச்சல், பணவிரயம், காலதாமதம் போன்ற பலவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
இப்போதுள்ள விதிகளின்படி இந்த அலைச்சலைத் தவிர்க்க, உரிய நபர் வேறு ஒரு உறவினருக்கு 'பவர்' கொடுக்கலாம். ஆனால், அப்படி மற்றொருவர் பெயருக்கும் பவர் கொடுப்பதற்கும்கூட, இவர் குறிப்பிட்ட சார்-பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றாகவேண்டும்.

அதேபோல ஒருவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு வெளியூர் பயணிப்பதில் சிக்கல் இருக்கும். இப்படி பல தரப்பினருக்கும் பதிவு அலுவலகத்திற்குச் சென்றுவருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
வெளிநாடுகளில் எல்லாம், வழக்கறிஞர் அலுவலகத்திலேயே பத்திரப்பதிவை முடித்துவிடலாம். அவ்வளவு எளிமையான சட்டங்கள் அங்கே உள்ளன.
அதேபோல நம் நாட்டிலும் சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் பத்திர மோசடி செய்தால் 40 வருடங்கள்வரை சிறைத் தண்டனை. அந்த அளவுக்கு சட்டங்கள் கடுமையாக உள்ளன. இங்கும் அதேபோல சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இல்லையெனில், வேறு ஊரில் உள்ள சொத்து என்பதால் போலி பத்திரப் பதிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது." என்கிறார் ஆறுமுக நயினார்.
இ-பத்திரப்பதிவு : இலாபம் என்ன?: "இ-பத்திர ஆவணங்கள் மூலம் இந்த மோசடி நடப்பது குறைக்கப்பட்டுள்ளது இல்லையா?" என்றோம்.
"உண்மைதான். இ-பத்திரங்களில் பார் கோடு உள்ளது. அதைவைத்தே நாங்கள் பதிவுசெய்வோம். அது லாக் ஆகிவிடும். வேறு போலி எண் போடமுடியாது. அதே பத்திரத்தை போலியாக ஒருவர் கொண்டுவந்தால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நீங்கள் சொல்வதைப்போல இ-பத்திரப்பதிவு மூலம் 95% போலி பத்திரப்பதிவுகளைத் தடுக்கமுடியும் என்பது உண்மைதான்" என்றும் ஆறுமுக நயினார் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications