மோசடி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்யும் அதிகாரம்.. தமிழக அரசின் மனு! விசாரணைக்கு ஏற்பு
சென்னை: மோசடி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளருக்கே தெரியாமல் மோசடியாக பத்திரங்களை தயாரித்து சொத்துக்களை பதிவு செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத நபர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்வதாகும்.

போலி பத்திரப்பதிவு
இப்படி போலி மற்றும் மோசடி பத்திர பதிவுகளால் உண்மையான நில உரிமையாளர்கள் கடும் பாடு பட வேண்டிய நிலை இருந்தது. அதாவது, நிலத்தின் மீது உரிமை இருக்கும் உண்மையான உரிமையாளர்கள் நிலத்தை பறிகொடுத்துவிட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. நீதிமன்றத்தில் வழக்குகள் பல ஆண்டுகளாக நடக்கும் போது, பல நேரங்களில் உண்மையான உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் முன்பே அவர் இறக்கும் நிலை கூட ஏற்படுகிறது.
இதுமட்டும் இன்றி நீதிமன்றங்களிலும் நில மோசடி வழக்குகள் அதிகமாக நிலுவையில் உள்ளன. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு மோசடியாக ஆள்மாறாட்டம், போலி டாக்குமெண்ட்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முறைகேடாக பதிவு செய்யப்படும் பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதற்காக 77 ஏ சட்டத்தில் திருத்தத்தினை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் மோசடி பத்திர பதிவுகள் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், மோசடி பத்திர பதிவுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
இதனால் பல நூறு கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் வசம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. மோசடியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு உண்மையான நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை இழந்து நீதிமன்றத்தின் வாசல்படி ஏறி அலைவது தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக அவர்களது, நிலம் மீட்கப்பட்டன. இதனால், நில உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணைக்கு ஏற்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், பர்திவாலா மற்றும் மகாதேவன் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கூறினர். தமிழக அரசின் இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications