தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு! 3 மணிநேரமாக மக்கள் காத்திருப்பு! என்னாச்சு?
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையதள தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அங்கு பணிகள் தாமதமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பத்திரப் பதிவுத் துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அத்துடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மேலும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து சேவையாற்றி வருகிறது.
இந்த குறிக்கோளுடன் இந்த துறை நவீனமயமாக்கலுக்கு அடிகோலிட்டுள்ளது. சென்னை, கோவை , கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல அலுவலகங்களும் அரக்கோணம், அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 571 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகம் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இடத்தை நாம் விலை கொடுத்து வாங்கலாம்.
சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன. வாரத்தில் 5 நாட்கள் இந்த துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இனி சனிக்கிழமைகளிலும் இந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையில் பத்திரப்பதிவு செய்ய ரூ 1000 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் நிறைய பேர் கூடும் இந்த அலுவலத்தில் காலை முதல் 3 மணி நேரமாக இந்த பத்திரப்பதிவு பணிகள் தாமதமாகி வருகிறது.
தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்திரப்பதிவு தாமதமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதற்கு காரணமாக இணையதள பிரச்சினை என சொல்லப்படுகிறது. இது போல் சில மாவட்டங்களிலும் இணையதள பிரச்சினையால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பிரச்சினை ஏற்பட்டது. எனினும் அங்கு சீராகிவிட்டது.












Click it and Unblock the Notifications