ரூட் மாறும் மாநகர பேருந்துகள்! பரிந்துரையை வெளியிட்ட போக்குவரத்து குழுமம்.. சென்னை மக்களே கவனம்
சென்னை: சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்ற சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரயில் நிலையங்களில் எனில் அது சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள்தான். இந்நிலையில், வெளி மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம், வேலூர் என மேற்கு மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

அதேபோல தென் மாவட்டங்கள் முழுமைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை உள்ள பாதைகள் மூன்று வழி பாதையாக மட்டுமே இருக்கிறது. எனவே தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் எழும்பூர் வரை தடையின்றி வந்துவிடுகிறது.
ஆனால், அங்கிருந்து கடற்கரை வருவதற்கு தாமதமாகிறது. இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதேபோல எழும்பூரிலிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இந்த மூன்று வழிப்பாதை காரணமாக தாமதமாக இயக்கப்படுகிறது.
எனவே இந்த பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஜூலை 1ம் தேதி முதல், சென்னை கடற்கரையிலிருந்து, சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து பறக்கும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல தற்போது சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றவும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. அதாவது சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் வரும் 26ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
இதனையடுத்து 27ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பறக்கும் ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கு காரணம் சென்னை கடற்கரை டூ எழும்பூர் வரை அமைய உள்ள நான்காவது ரயில் தடம்தான். எனவே பொதுமக்கள் பறக்கும் ரயில் சேவையை எளிதாக அணுக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகள், சிந்தாதிரிப்பேட்டை வழியாக இயக்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எனவே விரைவில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு அண்ணாசாலை டூ சென்ட்ரல் மாநகர பேருந்துகள் இனி சிந்தாதிரிப்பேட்டை வழியாக இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications