மஞ்சுமெல் பாய்ஸ் மட்டுமில்லை.. பிரேமலு படத்திலும் அதேதான்.. புது ட்ரெண்ட் நோட் பண்ணீங்களா!
சென்னை: பழைய நினைவுகளை தூண்டும் காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்கள் சமீபத்திய ஹிட் திரைப்படங்களில் மறுபடியும் காட்டப்படுவது புது ட்ரெண்ட்டாகி வருகிறது. அதிலும் பிரேமம், பிரேமலு உள்ளிட்ட மலையாள படங்களில் காட்சிக்கு இடையே வைக்கப்பட்ட பாடல்கள் மலையாள இசையின் பொற்காலத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
அரவிந்த் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான 'தேவராகம்' திரைப்படத்தின் 'யாயயா யாதவா' (ya ya ya yadava) பாடல் "பிரேமலு" திரைப்படத்தில் முக்கிய காட்சியில் பயன்படுத்தப்பட்டது. ஹீரோயின், தனது ஆபீஸ் நண்பரோடு டிராமா நிகழ்ச்சி நடத்தும்போது பாடும் இந்த பாடலால் ஹீரோ கடுப்பாவதாக காட்சியிருக்கும். அடடே பாட்டு நல்லா இருக்கே எனத் தமிழ் ரசிகர்கள் வேண்டுமானால் நினைத்திருக்கலாம், ஆனால் மலையாள ரசிகர்களுக்கு அது 90ஸ் பாடல் என நன்கு தெரியும்.

அதிலும் படம் ரிலீசான நேரத்தை விட இப்போதுதான் யாதவா பாடல் இன்னும் பிரபலம் என்கிறார்கள் மலையாளிகள். 28 ஆண்டுகளுக்குப் பிறகு 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் புதிய பிரபலத்தைப் பெற்ற இந்த பாடலின் பாடலாசிரியர் எம்.டி.ராஜேந்திரன், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதே பயன்படுத்தப்பட்ட நேரடி இசையமைப்பு நுட்பம் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக நாஸ்டாலஜி ஃபீலிங்குகளை அள்ளித் தெளித்த பிரேமம் படத்திலும் thenmavin kombath உட்பட பல கிளாசிக் படங்களின் பாடல்கள் பின்னணியில் ஓடுவது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது.
மம்முட்டி நடித்து 1985 ஆம் ஆண்டு வெளியான "Nirakkoottu" படத்தின் 'பூமனமே ஒரு' பாடல், சிறந்த பெண் பாடகிக்கான முதல் மாநில விருதை கே.எஸ்.சித்ரா பெறக் காரணமாக இருந்தது. ஜெயராம் நடித்த 'ஓஸ்லர்' படத்தில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. 39 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் இனிக்கிறது அப்பாடல்.
1991 ஆம் ஆண்டு வெளிவந்த 'குணா’ திரைப்படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்’, 'மஞ்சுமெல் பாய்ஸ்’ (manjummel boys ott) திரைப்படத்தில் புத்துயிர் பெற்றுள்ளது. இளையராஜாவின் இசையில் வாலியின் வரிகளில் பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போதும் வாய்களில் முனுமுனுக்க வைத்துக் கொண்டுள்ளது. ஓடிடியில் ரிலீசும் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் 240 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம், தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரிஜினல் தமிழ்த் திரைப்படங்களைக் கூட மிஞ்சியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை வெறும் 72 நாட்களுக்குள் எட்டியுள்ளது.
சமகாலத் திரைப்படங்களில் இந்தப் பாடல்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது நாஸ்டாலஜி பயணம் மட்டுமல்ல, வெவ்வேறு தலைமுறை மலையாள இசை ரசிகர்களை இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. இதுபோன்ற குறிப்பிடத்தக்க பாடல்கள் ஒரே நேரத்தில் புத்துயிர் பெறுவது மலையாள இசை ஆர்வலர்களிடையே ஒரு கூட்டுக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய படங்களின் மூலம் கிளாசிக் பாடல்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும் சம்பவங்கள், இசைக்கு வயதாகாது, காலத்தை கடந்து விஞ்சி நிற்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications