சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவர் ஆகிறார் மூத்த விஞ்ஞானி அமுதா! பாலச்சந்திரன் இன்றோடு ஓய்வு
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக, மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் 7 மண்டல வானிலை ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை தொடர்பான செயல்பாடுகளை கவனிக்கிறது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. ஹைதராபாத், பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.
வானிலை மையத்தின் தலைவர்களாக இருப்பவர்கள் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிரபலம் ஆவது வழக்கம். பருவமழை காலங்களின்போது, பள்ளி விடுமுறை பற்றி தெரிந்துகொள்ள வானிலை அறிவிப்புகளை பார்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு வானிலை மைய தலைவர்கள் விருப்பமானவர்கள். அந்தவகையில், முன்னாள் தலைவர் ரமணன், பள்ளிக் குழந்தைகளால் கொண்டாடப்பட்டவர்.
இப்போது, தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்கிறார் அமுதா. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, இனி, வானிலை சார்ந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பார்.












Click it and Unblock the Notifications