செந்தில் பாலாஜி இருக்கும் காவேரி ஆஸ்பத்திரியில் அறிமுகமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சை..ஆச்சர்ய தகவல்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 'காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ரோபோட்டிக் சர்ஜரிஸ்' என்ற பெயரில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான அறுவை சிகிச்சைகள் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படும் என்பதை பார்ப்போம்.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை பற்றி பார்க்கும் அலோபதி (ஆங்கில) மருத்துவத்தில் நடந்த முக்கியமான சில மாற்றங்களை பார்ப்போம். அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சைகள் தான் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் இதில் புதிய மாற்றமாக 'திறப்பு அறுவை சிகிச்சை'யை (Open surgery) அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 'நுண்துளை அறுவை சிகிச்சை' (Pin hole surgery) இப்போது அதிக அளவில் நடந்து வருகிறது.
உடலைக் கீறாமல், வயிற்றைத் திறக்காமல், சில துளைகளை மட்டும் போட்டு, கேமராவும் மின்விளக்கும் இணைந்த 'லேப்பராஸ்கோப்' (Laparoscope) என்னும் கருவி கொண்டு 'லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை' (Laparoscopic surgery) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 25 வருடங்களாக இதயம், குடல்வால், பித்தப்பை, கருப்பை, குடல், சிறுநீரகம், காது, மூக்கு, எலும்பு மூட்டு போன்ற உறுப்புக் கோளாறுகளுக்கு இந்த அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இந்நிலையில் 'ரோபோ' செய்யும் அறுவை சிகிச்சை கடந்த சில வருடங்களாக அதிகமாகிவிட்டது.

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன? : நுண்துளை அறுவை சிகிச்சை எப்படிசெய்கிறார்களோ அப்படித்தான் ரோபோ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நுண் துளை அறுவை சிகிச்சையில் கருவிகளே அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் என்றாலும், அந்தக் கருவிகள் மருத்துவரின் கைகளில்தான் இருக்கும். ரோபோ அறுவை சிகிச்சையில் 'ரோபோ' என்னும் மனித இயந்திரத்தின் கைகளை இயக்குவதும் மருத்துவர்தான். ஆனால், நேரடியாக அந்தக் கைகளை மருத்துவர் இயக்கமாட்டார். ஒரு கம்ப்யூட்டர் மூலம் இயக்குவார். இதுதான் நுண்துளை அறுவை சிகிச்சைக்கும் ரோபோ அறுவை சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
ரோபா எப்படி சிகிச்சை மேற்கொள்ளும்: நோயாளியின் மேசைக்கு அருகில் ரோபோ வைக்கப்படும். மயக்க மருத்துவர் நோயாளிக்கு மயக்கம் கொடுத்தபின், 'ரோபோடிக்' அறுவை மருத்துவர் நோயாளியின் சிகிச்சைக்குரிய உடல் பகுதியில் மிகச் சிறிய துளைகள் இட்டு, அவற்றுக்குள் 3 டி கேமரா, மின்விளக்கு, கத்தி, கத்தரிக்கோல், மின்சூட்டுக்கோல் உள்ளிட்ட நுண்கருவிகளை நுழைப்பார். பின்னர் ரோபோவின் கைகளை அந்தக் கருவிகளுடன் வெளிப்பக்கத்தில் இணைப்பார். கணினித் திரையில் நோயாளியின் உடல் பகுதிகள் முப்பரிமாணப் படங்களாகத் தெளிவாகத் தெரியும். நாம் ரிமோட் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்குவதுபோல் இதற்கென உள்ள ஒரு ரிமோட் மூலம் ரோபோவை மருத்துவர் இயக்குவார். உறுப்புகளைப் பிரித்து வெட்டுவது, தையல் போடுவது, ரத்தக் குழாய்களைப் பிரித்து வெட்டுவது, இணைப்பது, ரத்தம், கழிவுகளை அகற்றுவது, அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட உறுப்பைச் சிறு சிறு பகுதிகளாக நசுக்கி, உறிஞ்சி வெளியில் எடுப்பது என அறுவை மருத்துவர் கட்டளைகளுக்கு ஏற்றவாறு ரோபோவின் கைகளால் துல்லியமான முறையில் அறுவை சிகிச்சையை செய்துவிடும்.
ரோபோ சிகிச்சை என்பது மிக துள்ளியாக மேற்கொள்ளும் என்பதால் மருத்துவ துறையில் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. டாக்டர்கள் கைளுக்கு எட்டாத உறுப்பும் ரோபோவிற்கு எட்டும் என்பதால் எளிதாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் நோய்கள் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளில் ரோபோ அதிக பங்கு வகிக்கிறது. மேலும் கருப்பை அகற்றுதல், கருப்பைக் கட்டிகளை அகற்றுதல், கருக்குழாய் இணைப்பு போன்ற பெண்களுக்கான அறுவை சிகிச்சைகளிலும் ரோபா பயன்படுத்தப்படுகிறது. . இதய நோய்கள், எலும்பு நோய்கள், குழந்தை நோய்கள், காது-மூக்கு-தொண்டை நோய்கள், நரம்பியல் நோய்கள், தலை, கழுத்து என எல்லாவற்றிலும் ரோபோ அறுவை சிகிச்சை இப்போது செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 'காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ரோபோட்டிக் சர்ஜரிஸ்' என்ற பெயரில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான அறுவை சிகிச்சைகள் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் முதன் முதலாக சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்க இருப்பதாகவும், இதில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்கள் பணியாற்ற இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்த புதுமையான செயல்திட்டத்தில் "டாவின்சி'' என்ற பெயரிலான 4-வது தலைமுறை ரோபோட்டிக் சிஸ்டம் இடம்பெறுகிறது. இதற்கு முன்பு இல்லாத மிகச்சிறப்பான துல்லியம் மற்றும் 3டி விஷன் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை கொண்டதாக மருத்துவ உலகில் உயர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மிகப்பிரபலமான சாதனமாக இது இருக்கிறது.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் பிரிவில் ஆராய்ச்சியும், மேம்பாடும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு சரியான நிபுணத்துவம் அவசியம். மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்க அத்தகைய திறனை அதிகளவில் கொண்டிருக்கும் அனுபவமிக்க அறுவைசிகிச்சை நிபுணர்களை நாங்கள் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications