ரொனால்டினோவை பார்க்க முண்டியடித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி நெகிழ்ச்சி.. சென்னையில் ருசிகரம்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து அணிகள் கால்பந்து போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி வென்றது. இந்தப் போட்டிக்காக வந்த நட்சத்திர வீரர் ரொனால்டினோ, நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கை ஊக்கப்படுத்தியுள்ளார்.
பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து அணிகள் (Brazil Legends vs India All Stars) மோதிய வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து காட்சிப் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டி தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சென்னையில் கால்பந்து போட்டி
சென்னையில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான கால்பந்து கருத்தரங்கம் நடைபெறுகிறது. கால்பந்து விளையாட்டை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது, ஒரே குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட நோக்கத்தோடு நடைபெறும் இந்த கருத்தரங்கில் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் வீரர்களிடம் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்விற்கு முன் காட்சிப் போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் - இந்தியன் ஆல் ஸ்டார்ஸ் அணியும் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று மோதின. ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ் அணி, விஜயன் வழிநடத்திய இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
நட்சத்திர வீரர்கள் ரொனால்டினோ, ரிவால்டோ
2002ல் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் லெஜண்ட்ஸ் ரொனால்டினோ, ரிவால்டோ, லூசியோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்திய அணியில் முன்னாள் வீரர்களான விஜயன், சண்முகம் வெங்கடேஷ், கரண்ஜித் சிங், சுபாஷிஷ் ராய் சவுத்ரி, அர்னாப் மாண்டல், நல்லப்பன் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியைக் காண பலதரப்பில் இருந்தும் மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரு அணி வீரர்களையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார்.
பிரேசில் லெஜண்ட்ஸ் வெற்றி
இந்த நட்சத்திர கால்பந்து போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், யாரும் கோல் அடிக்க முடியவில்லை. 43வது நிமிடத்தில் வியோலா முதல் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அடுத்த ஒரே நிமிடத்தில் (44') இந்தியாவின் பிபியானோ பெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டுவந்தார்.
இதனால் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாற்று வீரராக களமிறங்கிய ரிக்கார்டோ ஒலிவேரா 63வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது பிரேசில் லெஜண்ட்ஸ் அணி.
அஜித் மகன் ஆத்விக்கை ஊக்கப்படுத்திய ரொனால்டினோ
இந்த சிறப்பான கால்பந்து போட்டியை காண நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோரும் மைதானத்துக்கு வந்திருந்தனர். அஜித்தின் மகன் ஆத்விக், ரொனால்டினோவின் தீவிர ரசிகர். ரொனால்டினோவை ரசிகர்கள், சிறுவர்கள் என பலர் சந்திக்க ஆர்வம் காட்டினர். அப்போது ஆத்விக்கின் தலையில் தடவி அவரை ஊக்கப்படுத்தினார் ரொனால்டினோ. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications