Rottweiler dogs ban: உயிரை குடிக்கும் ராட் வீலர் நாய்கள்! தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: ராட் வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தலைமை கால்நடை துறை அதிகாரி ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.
சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை பெரும் கவலையை எழுப்பியுள்ளது. அதேபோல வீடுகளில் வளர்க்கப்படும் ராட் வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வகை நாய்களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றன.

இவை அனைத்தும் வெளிநாட்டு வகையை சேர்ந்த இனங்கள். இதில் ராட் வீலர் என்பது பளு வண்டியை இழுக்கவும், கால்நடைகளை துரத்தி சென்று அந்த குழுவை ஒழுங்குக்குள் கொண்டுவரவும் காலங்காலமாக வளர்க்கப்பட்டு வந்தன. எனவே இந்த வகை நாய்கள் இயல்பிலேயே அதிக சுறுசுறுப்பாகவும், உடல் உறுதியுடனும் இருக்கும். எனவே இதனை கட்டுப்படுத்துவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. இதனால் இந்த வகை நாய்கள் ஆபத்தானவையாக தெரிகின்றன.
அதேபோல, பிட்புல் வகை நாய்கள், நாய் சண்டைகளுக்காகத்தான் வளர்க்கப்படுகின்றன. எனவே உறுதியான உடல் அமைப்பை கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது எஜமானருக்கு மட்டும் கட்டுப்படும் சுபாவம் கொண்டிருப்பதால் மற்றவர்களை எளிதில் தாக்கக்கூடும். ஆகையால் இயல்பாகவே எளிதில் மூன்றாம் நபரை தாக்கும் திறன் கொண்டிருக்கும். இதெல்லாம்தான் இந்த வகை நாய்களை ஆக்ரோஷமானதாக மாற்றியிருக்கின்றன.
அதற்காக இந்த வகை நாய்கள் எல்லாமே ஆக்ரோஷமானது என்று சொல்லிவிட முடியாது. இதை வளர்க்கும் விதம்தான் இதனை ஆக்ரோஷமானவையாக மாற்றுகின்றன. நாய்களை சோஷியலாக வளர்க்க வேண்டும். குடும்பத்தில் அனைவரிடத்திலும் அதை பழக அனுமதிக்க வேண்டும். வீட்டிற்குள் அடைத்து வைக்காமல் அடிக்கடி அதை வெளியில் விட்டு பழக்க வேண்டும். இப்படி வெளியில் அழைத்துச் செல்லும் இடத்தில் மூன்றாம் நபர்களிடத்திலும் அதை பழக அனுமதிக்க வேண்டும்.
மட்டுமல்லாது சிறு வயதிலிருந்து அந்த நாயின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், நாயை நம் கன்ட்ரோலில் வைக்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்தால் நாய் மற்றவர்களை தாக்குவதை தடுக்க முடியும். இது எல்லாவற்றையும் விட முக்கியம், நாய் வளர்க்க தெரிந்தால் மட்டும் நாயை வாங்க வேண்டும். கவுரவத்திற்கு வாங்கி வளர்த்தால் சிக்கலில் அது உங்களை இழுத்துவிட்டுவிடும்.
சமீபத்தில் சென்னை தண்டையார் பேட்டையில் பிட்புல் ரக நாய் ஒன்று பள்ளி சிறுமியை கடுமையாக தாக்கியிருந்தது. இதனால் சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. எனவே சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
இப்படியான நாய்கள் ஆபத்தானவையாக இருப்பதால்தான் இதை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையில் தலைமை கால்நடை துறை அதிகாரி ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஆக.12ம் தேதியன்று தள்ளி வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications